districts

img

8வது ஊதிய குழுவை அமைக்கக்கோரி வேலூரில் ஓய்வூதியர்கள் தர்ணா

வேலூர், செப். 18 - மத்திய அரசு ஓய்வூதியர் சங்கங்களின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில்  மாவட்ட தலைவர் ஏ.கதிர் அகமது தலைமையில் வேலூர் தலைமை தபால் அலுவலக வளாகத்தில் தர்ணா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.தங்கவேலு வர வேற்று பேசினார். மாநகர தொழிற்சங்க கூட்டமைப்பு  அமைப்பாளர் சி.ஞான சேகரன் துவக்கி வைத்தும்,  அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயல் தலைவர் ஜி.நரசிம்மன் நிறைவு செய்தும் பேசினர். ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் மாவட்ட செயலாளர் பி.லோகநாதன், ரயில்வே ஓய்வூதியர் சங்கம் பிரபா சந்திரன், பிஎஸ்என்எல் டாட் பென்ஷனர்ஸ் அசோசியேஷன் பி.முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட பொருளாளர் ஆர்.மூர்த்தி நன்றி கூறினார். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத கால டிஏ, டிஆர்-ஐ உடனே வழங்க வேண்டும், 1.1.2017 முதல் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 15விழுக்காடு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.