districts

img

சமூக நலத்திட்டங்கள் சீர்குலைப்பு ஒன்றிய அரசு மீது ஓய்வூதியர்கள் குற்றச்சாட்டு

சென்னை, நவ. 16- சமூக நலத்திட்டங்களை ஒன்றிய அரசு சீர்குலைத்து வருவதாக ஓய்வூதியர்கள் கருத்தரங்கில் தலைவர்கள் குற்றம்சாட்டினர். சென்னை இபிஎஸ் 95 பென்சனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் அம்பத்தூரில்  வெள்ளி யன்று (நவ. 15) நடை பெற்றது. தலைவர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கி னார். செயலாளர் கே.பி.பாபு கருத்தரங்கை துவங்கி வைத்து பேசினார். தொமுச அகில இந்திய தலைவர் கி.நடராஜன், அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ஸ்ரீகுமார், சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் வி.குமார், எம்எல்எப். தலை வர் அந்தரிதாஸ், இபிஎப் ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் சி.சிவஞானம், அசோக் லேலண்ட் இணைச்செயலாளர் கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். தலைவர்கள் பேசியதில் இருந்து சுருக்கம் வருமாறு,  ஓய்வூதியம் என்பது நமக்கு வழங்கப்படும் கருணைத்தொகையோ பிச்சையோ அல்ல. நம் உழைப்பில் நிர்வாகம் சிறிது பிடித்தம் செய்து அதை ஓய்வுக்கு பிறகு வழங்குவது தான் ஓய்வூதியம். தன்னு டைய ஊழியர்களை வய தான காலத்தில் பாது காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், முத லாளிகளுக்கும் உள்ளது. வயதான பெற்றோரை பிள்ளைகள் பாது காக்கவில்லை என்றால் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது. அப்படி இருக்கும்போது அரசோ, முதலாளிகளோ ஓய்வூதியம் வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினர். புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தும் போது, ராணுவத்தை சேர்ந்த முப்படைகளுக்கும் பழைய ஓய்வூதிய திட்டமே அமலாகும் என தெரிவித்தார்கள். ஆனால் ராணுவத்தில் புதிய நியமனம் என்பதே இல்லை. மாறாக ஒப்பந்த அடிப்படையில் பணி என்பதால்  அவர்களுக்கு ஓய்வூதியம் என்பதே கிடையாது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை  அதி கரித்துள்ளது. புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓய்வூதி யர்கள் தாங்கள் பெரும் ஓய்வூதியத்தை பீரோ வில் பூட்டி வைக்கப் போவதில்லை. அந்த பணம் சந்தைக்கு வரப்போகிறது. சந்தைக்கு பணம் வந்தால் உற்பத்திப் பெருகும். உற்பத்தி பெருகினால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். ஏறக்குறைய 40 வருடங்கள் உழைத்த தொழிலாளர்களுக்கு, ஊழி யர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கப்படுகிறது. ஆனால் ஐந்தாண்டு காலம் மக்களவை உறுப்பி னராகவோ, சட்டமன்ற உறுப்பி னராகவோ இருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. புதிய பென்சன் திட்டத்தை கொண்டு வந்த போது சிஐடியு அதை கடுமையாக எதிர்த்தது. அதற்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு கொடுத்தது. ஆனால் நீதி மன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறிவிட்டது. தற்போதைய ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கை களை கடைபிடிக்கிறது. ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களை ஒன்றிய அரசு சீர்குலைத்து வருகிறது. எனவே நாம் நமது உரி மைகளுக்காக போராடும் அதே நேரத்தில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட போராட்டத்தை சங்க வித்தியாசமின்றி ஒன்றி ணைந்து முன்னெடுப்போம் என்றும்  தலைவர்கள் பேசி னார்கள். முன்னதாக முருகப்பா  நிறுவன ஓய்வுபெற்றோர் சங்கத்தின் தலைவர் எம்.சுப்பிரமணி வரவேற்றார். அமைப்பின் துணைச் செயலாளர் எஸ்.உமாகாந்தன் நன்றி கூறினார். குறைந்தபட்ச ஓய்வூ தியம் ரூ.9ஆயிரம் பஞ்சப்ப டியுடன் வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதியுள்ள அனைவருக்கும் உயர் பென்சன் வழங்க வேண்டும், தொழிலாளர்களின் சேமிப்பு தொகையான வருங்கால வைப்புநிதியை பங்குசந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்வதை கைவிட வேண்டும், ரயில்வே கட்டண சலுகையை மூத்த குடிமக்களுக்கு மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.