districts

img

பழவேற்காடு-தோனிரேவு சாலை துண்டிக்கப்படும் அபாயம்!

பொன்னேரி, செப். 22- திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த கோட்டை குப்பம் ஊராட்சியில் தோணிரேவு,ஜமீலாபாத்,செஞ்சி அம்மன் நகர்,திடீர் நகர் என நான்கு கிராமங்கள் உள்ளன. சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு செல்வதற்கு ஒட்டுமொத்த மக்களும் பயன்படுத்தும் ஒரே சாலை பழவேற்காட்டிலிருந்து தோணிரேவு,ஜமிலாபாத் பகுதிக்கு செல்லும் சிமெண்ட் சாலையாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சிமெண்ட் சாலை தற்போது மழை காரணமாக இருபக்கமும் அரிப்பு ஏற்பட்டு முற்றிலும் சாலை பெயர்ந்து விழக்கூடிய அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சாலையின் ஒரு பகுதியில் சிறு துளை ஏற்பட்டது. இந்த திடீர் பள்ளம் நாளடைவில் பெரியதாக மாறியது. இந்தச் சாலையில் பள்ளிப் பேருந்துகள், தண்ணீர் டேங்க் வாகனங்கள், வீடுகளுக்கு கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் லாரிகள்,திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடிய வேன்கள் என நான்கு சக்கர வாகனங்களும் ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களும் ஏராளமாக சென்று வருகின்றன. நான்கு சக்கர வாகனங்கள் அவ்வழியாக செல்லும் போது அதிகபாரம் காரணமாக ஓட்டையில் விரிசல் பெரிதாகி வருகிறது. தற்போது அந்த உடைப்பு மீண்டும் வாகனங்களால் இடிந்து விழுந்து சாலையின் ஒருபகுதி  பெயர்ந்து விழுந்து உள்ளது. அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள கற்களை கொட்டி அந்த பள்ளத்தில் யாரும் தவறிவிழாதவாறு ரப்பீஸ்கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்து வரும் கோடை மழை காரணமாக அது பயனளிக்காமல் சாலை முற்றிலும் துண்டிக்கும் நிலையில் உள்ளது. இதனால் இந்த நான்கு கிராமங்களில் சாலையை பயன்படுத்த முடியாமல் தனித் தீவாக மாறக்கூடிய சூழலும் ஏற்பட்டுள்ளது.  மேலும் இந்த ஓட்டையில் இருசக்கர வாகனங்கள் அல்லது மற்ற வாகனங்கள் விழுந்து பெரிய விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் உள்ளது. எனவே அரசுத்துறை அதிகாரிகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.