பழவேற்காடு-கலங்கரை விளக்கு மேம்பாலத்தில் மின் விளக்குகள் சுற்றுலா பயணிகள் இருளில் சென்று வருவதால் எந்நேரமும் விபத்து மற்றும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் விரைந்து மின் விளக்குகள் அமைக்க கோரி சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அழகிய சுற்றுலாத் தலமாகும். விடுமுறை, பண்டிகை மற்றும் விழா நாட்களில் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தீபாவளியையொட்டி நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பழவேற்காட்டில் படையெடுத்தனர். குறிப்பாக பழவேற்காடு-லைட் ஹவுஸ் மேம்பாலம் வழியாக கடற்கரைக்கு நடந்து சென்றும், வாகனங்கள் மூலமும் சென்று வருகின்றனர். மீண்டும் மாலையில் வீடு திரும்ப பழவேற்காடு பேருந்து நிலையத்திற்கும், மீன் மார்க்கெட் பகுதிக்கும் மேம்பாலம் வழியாக வரும் போது மின் விளக்குகள் இல்லாமல் இருளில் நடந்து செல்கின்றனர். மேம்பாலம் கீழே சுமார் 70 அடி பள்ளமும், பழவேற்காடு ஏரியோடு ஆழமான பக்கிங்காம் கால்வாயும் உள்ளது. குழந்தைகளோடு வரும் பயணிகள் குழந்தைகளை உயிர் பயத்துடன் அழைத்து வருகின்றனர். கடந்த ஆறு மாத காலமாக இருளில் மூழ்கிக் கிடக்கும் மேம்பாலத்தில் தொடர் விடுமுறை நாட்கள், விஷேச தினங்கள் வர இருப்பதால், அவசியம் மின் விளக்குகள் எரிய வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் மேம்பாலத்தில் உள்ளூர் பெண்கள் பணிகளுக்கு செல்வதற்கும், மீன் வியாபாரம் செய்வதற்கு மார்க்கெட் செல்வதற்கு மாலை நேரத்தில் அதிகம் பயணிப்பதால் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் உள்ளூர் பொதுமக்கள் அரசு துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.