மாவட்டத்தில் 100 நாள் வேலை செய்த மக்களுக்கு நிலுவையில் உள்ள 4 மாதம் சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் 200 நாட்கள் வேலையும் தினக்கூலி ரூ. 600 வழங்க வேண்டும். ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலை திட்ட நிதியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் முகையூர் ஒன்றியம் மணம்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் கடலூர், திருவண்ணாமலை மாவட்டத்திலும் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரிலும் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில, மாவட்ட மற்றும் வட்டாரம், ஒன்றியத் தலைவர்கள் பங்கேற்றனர்.