சென்னை, பிப். 15 - மாநகரப் போக்குவரத்து கழகத்தில் உள்ள 31 பணிமனைகள், 2 தொழிற் கூடங்கள் உள்ளன. 3 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 80 இரவு நேரத்தில் இயக்கப்படுகிறது. எஞ்சிய பேருந்துகளை காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. பேருந்துகளுக்கு எரிபொருட்களை நிரப்பி, பணிமனையில் நிறுத்துவது, பணி தடபழுது சரி பார்த்தல், லாரி இயக்குவது போன்ற பணிகளுக்கு ஓட்டுநர்களையே பயன்படுத்தி வருகின்றனர். கழகத்தில் பணி ஓய்வு வயது 58 என்று இருந்ததை 60ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் வயது முதிர்ந்த ஓட்டுனர்கள் வழிதடங்களில் பணி புரிய கடும் சிரமப்படுகின்றனர். எனவே, பணி ஓய்வு பெறக்கூடிய நிலையில் உள்ள ஓட்டுநர்களை பணிமூப்பு அடிப்படையில் அவர்களுக்கு இத்தகைய பணிகளை வழங்க வேண்டும் என்று அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. 2022ம் ஆண்டு ஜூலை மாதம் ‘அத்தியாவசியமில்லாத ஓட்டுநர் 532’ பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் கோரப்பட்டது. அதற்கு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் மீண்டும், ஸ்டால் வார்ட் பீப்பிள் சர்வீஸ் லிட் என்ற நிறுவனத்தின் பெயரில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதனை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம், ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப ஊழியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேருந்துகளுக்கு எரிபொருளை நிரப்பி பணிமனையில் நிறுத்துவது, பணி தடபழுது சரி பார்த்தல், லாரி இயக்குவது போன்ற பணிகளுக்கு ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஓட்டுநர்களை பயன்படுத்த வலியுறுத்தி மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநருக்கு கடிதம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பல்லவன் இல்லம் முன்பு பிப்.21 அன்று, ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமிக்க 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும்” என்றார்.