districts

img

என்.எல்.சி விரிவாக்கப் பணி: மக்கள் எதிர்ப்பால் திரும்பிச் சென்ற அதிகாரிகள்

நெய்வேலி, அக். 1-   வளையமாதேவியில் மக்கள் எதிர்ப்பால் என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணியை நிறுத்தி விட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் பல நாட்களுக்குப் பிறகு என்.எல்.சி 2ஆவது சுரங்க விரிவாக்கப் பணி தொடங்கியுள்ளது. என்எல்சி அதிகாரி கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கையகப்படுத்திய நிலங்களை சமன் செய்து வந்தனர். இந்நிலையில் இதனை அறிந்த வளையமாதேவி கிராம மக்கள், விவசாயிகள் பலர் பணி நடை பெறும் இடத்தில் ஒன்று திரண்டனர். அப்போது கைப்பற்றப்பட்ட இடங்களுக்கு இன்றுவரை முழுமையான இழப்பீடு வழங்கவில்லை. வாழ்வாதார பாதுகாப்பும் கிடைக்கவில்லை. வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை இல்லை.  இந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட  நிலம் 100 ஏக்கருக்கு மேல் இன்னமும் இருக்கிறது. அதற்கான நிவாரணமும் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் எங்க ளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டை தந்து விட்டு நீங்கள் பணியை துவக்குங்கள். நாங்கள் பணியை தடுக்கவில்லை என விவசாயிகள் கூறினர். ஆனாலும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மேடான பகுதிகள் தொடர்ந்து சமன்படுத்தப்பட்டது. இதற்காக காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின் விவசாயிகள் கிராம மக்களின் கோரிக்கைப்படி பேச்சு வார்த்தைக்கு பிறகு விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படும் எனக் கூறி விட்டு அதி காரிகள் பணியை நிறுத்தினர். ஆனால் கிராம மக்களும், விவசாயி களும் ‘‘நீங்கள் தற்போது இப்படித்தான் கூறுவீர்கள். ஆனால் மீண்டும் எங்களது கவனத்தை திசை திருப்பிவிட்டு உங்களது பணியை மேற்கொள்வீர்கள். அதனால், எங்களுக்கு இழப்பீடு கொடுத்து விட்டு நீங்கள் எந்த வேலையும் செய்யலாம். அதற்கு நாங்கள் தடை சொல்லவில்லை” என்றனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் ஜேசிபி இயந்திரங்களுடன் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.