districts

img

ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் பாறைகள் அதிகாரிகள் விசாரணை

திருப்பத்தூர்,ஜூன் 25-

    ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறைகள் மீது விரைவு ரயில் மோதியது குறித்து சென்னை புலனாய்வு குழுவினர் மோப்ப நாயுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து பெங்களூர் மற்றும் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆம்பூர் வழியாக சென்னை வரை செல்லக்கூடிய காவிரி விரைவு ரயில் இந்த வழித்தடத்தில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆம்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை (ஜன 25) விடியற்காலை 3:30 மணிக்கு ஆம்பூர் அடுத்த வீரவர் கோயில் அருகே வந்தபோது, தண்டவாளத்தின் மீது பாறை கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதை கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால், ரயில் வந்த வேகத்தில் அந்த பாறை கற்கள் மீது ரயில் இன்ஜின் மோதியது. இதில், பாறை கற்கள் சிதறின. இருந்தாலும், பாறை கற்கள் மீது ரயில் இன்ஜின் மோதிய சத்தம் பெரிய அளவில் கேட்டது. ரயில் மோதிய சத்தம் கேட்டதும், பயணிகள் அலறியடித்து கண்விழித்து ரயில் விபத்துக்குள்ளானதாக உணர்ந்து கூச்சலிட்டனர். உடனே, ஓட்டுநர் ரயிலின் வேகத்தை குறைத்தார். பிறகு ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.

    இது குறித்து ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ரயில் நிலையத்துக்கு ரயில் ஓட்டுநர் தகவல் கொடுத்தனர். ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையிலான ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  

   வீரவர் கோயில் அருகாமையில் உள்ள கடைகள் மற்றும் கோவில் பகுதிகளில் இருந்த நபர்களிடம் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், எந்த துப்பும் கிடைக்கவில்லை.  

    இதையடுத்து, சென்னையில் இருந்து ரயில்வே புலனாய்வு குழுவினர் மோப்ப நாய் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை அருகே ரயில் தண்டவாள இணைப்பு (பாயிண்ட்) சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் பாறைகள் கற்கள் அடுக்கி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

    சேலம் ரயில்வே உட்கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை டிஎஸ்பி பெரியசாமி தலைமையில் 10 காவலர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.