சென்னை, செப். 24- திருவொற்றியூர் மண்டலம், வார்டு 4க்கு உட்பட்ட வி.பி. நகரில் ரூ4 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக மண்டலக் குழு கூட்டத்தில் அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம் மண்டலத் தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பெரும்பான்மையான மாமன்ற உறுப்பினர்கள் குடிநீர் முறையாக வழங்கப்படாத நிலை உள்ளதாக தெரி வித்தனர். சிபிஎம் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பேசுகையில், ராமநாதபுரத்திற்கு குடிநீர் கடந்த 2 மாதங்களாக முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. வி.பி. நகர் உள்ளிட்டு வார்டு முழுவதும் பல தெருக்களில் பாதாள சாக்கடை அமைக்கப்படவில்லை என்றார். அதற்கு பதிலளித்த மெட்ரோ திருவொற்றி யூர் பகுதி பொறியாளர் அன்பழகன் விரைவில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும், அதுவரை லாரியில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டும் என்றார். மேலும் வி.பி. நகர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து ஜெயராமன் பேசுகையில், குடியிருப்புகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார். 4ஆவது வார்டில் 89 தெருக்களில் தார் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை 24 சாலைகளுக்கு மட்டுமே பணி உத்தரவு வழங்கி பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற சாலை பணிகள் எப்போது துவங்கப்படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மண்டலக் குழு தலைவர் அனைத்து சாலை பணிகளும் ஜனவரிக்குள் துவக்கப்படும் என்றார்.