திருவள்ளூர், நவ.3- மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய சமூக வலைதளங்களில் பதிவிடும் பதிவுகளை மீது விசாரணை நடத்தி தீர்வு காணாமல், வலைத்தளங்களை முடக்கும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் ஜனநாயக விரோத செயல்களை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு: திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடி இன மக்களுக்கு அரசு நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி குறிப்பாக தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வறுமை ஒழிப்பு திட்டங்கள், பழங்குடி மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதால் மாவட்ட ஆட்சியர், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசு, சமூக ஊடகங்கள் வாயிலாக குறிப்பாக வாட்ஸ் அப் மூலம் செய்தியை பதிவு செய்து வருகிறார். இதற்கு மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் உரிய பதிலை அளிக்க வேண்டும். வாட்ஸ் ஆப் மூலம் வரும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக தான் அரசு கைபேசிகளை வழங்குகிறது. ஆய்வுக் கூட்டங்களில் சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்களுக்கும் ஆக்கபூர்வமான பதில்களை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர், பழங்குடி மக்களுக்கான அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு எங்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசு தொடர்ந்து பதிவிடும் வாட்ஸ்ப்பை மாவட்ட ஆட்சியர் முடக்குவது எந்த விதத்தில் நியாயம். ஆட்சியரின் தனிப்பட்ட வாட்ஸ் ஆப்பை முடக்குவது அவரின் உரிமை என்று சொல்லலாம். ஆட்சியரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது என்பதால் அரசு வழங்கிய செல்போனுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வரும் செய்திகளை மக்களின் பிரதிநிதிகள் அனுப்பும் போது, அதையும் முடக்குவது என்பது கண்டனத்துக்குரியதாகும். வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் பதிவுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றதற்காக சாட்சியாக மாறிவிடும் என்பதற்கான ஆவணம் ஆகிவிடும், என்ற அச்சத்தின் வெளிப்பாட்டால் வாட்ஸ் அப்பை பிளாக் செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தொடர்ந்து போராடியதன் விளைவாக திருத்தணி வட்டம், வீரவநல்லூர் ஊராட்சி பகத்சிங் நகரில் 44 குடிமனை பட்டா வழங்கிய போது அன்றைய அமைச்சர் இது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். ஊத்துக்கோட்டை வட்டம், வாழவந்தான் கோட்டையில் பழங்குடி மக்களின் வீடுகளை சுற்றி எழுப்பப்பட்ட தீண்டாமை சுவற்றை போராட்டத்தின் விளைவாக இடிக்கப்பட்டது. இப்படி பழங்குடி மக்களுக்காக போராடி வரும் சங்கம் தான் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்கு கிராம வறுமை ஒழிப்பு திட்டங்கள் முழுமையாக சென்றடையவில்லை.
இதனால் பழங்குடி மக்கள் நுண் நிதி கடன் பெற்று கட்ட முடியாமல் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக 75 குடும்பங்கள் வெளியூர்களுக்கு குடி பெயர்ந்து விட்டனர். சில தற்கொலை முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. கண்டனம் அதேபோல், கொண்டா ரெட்டிஸ் பழங்குடி இனத்தை சேர்ந்த 296 குடும்பங்களுக்கு ஏற்கனவே கொடுத்த இனச் சான்றை கடந்த 10 தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ரத்து செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது குறித்து பூர்வாங்க விசாரணை ஏதும் மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளாமல்,இது சம்பந்தப்பட்ட எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் இப்படி தன்னிச்சையான போக்கில் நடந்து கொண்டிருப்பது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். நவ. 25 ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இத்தகைய போக்குகளை கண்டித்து வருகிற 25 ஆம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.