districts

img

முடிச்சூர், வேளச்சேரி சாலைகளை அகலப்படுத்த வேண்டும்

சென்னை, அக். 13 - முடிச்சூர், வேளச்சேரி சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் தொகுதி மாநாடு வலியுறுத்தி உள்ளது. கட்சியின் தாம்பரம் தொகுதி 14வது மாநாடு ஞாயிறன்று (அக். 13) முடிச்சூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பெருங்களத்தூர் மேம்பாலம் பகுதியில் பாதசாரிகள் கடக்க நடைமேம்பாலம் அமைக்க வேண்டும், அரசு நிலங்களில் வசிப்போருக்கும், ராஜீவ்காந்தி நகர் மக்களுக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும். நீர்நிலையோரம் உள்ள குடியிருப்புகளையும், எஞ்சிய நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும், அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும், மாநகரம் முழுவதும் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். தாம்பரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாநாட்டு பேரணியை கட்சியின் தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் க.சின்னையா லட்சுமி நகரில் இருந்து தொடங்கி வைத்தார். மாநாட்டிற்கு தொகுதிக்குழு உறுப்பினர் ஏ.சாதிக்பாட்ஷா தலைமை தாங்கினார். முன்னாள் பகுதிச் செயலாளர் பி.தர்மலிங்கம் செங்கொடியை ஏற்றினார். தொகுதிக்குழு உறுப்பினர் யயாதீன் வரவேற்றார்.  ஏ.பிரேமாவதி அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க, மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தொடக்கவுரையாற்றினார். வேலை-அமைப்பு அறிக்கையை தொகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணாவும், வரவு செலவு அறிக்கையை தொகுதிக் குழு உறுப்பினர் ஏ.ஜி.ஜெயவேலுவும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக் குழு உறுப்பினர் தீ.சந்துரு ஆகியோர் வாழ்த்தி பேசினர். செயற்குழு உறுப்பினர் ஜி.செந்தில் குமார் நிறைவுரையாற்றினார். எஸ்.ரஞ்சித்குமார் நன்றி கூறினார். பகுதிக்குழுதேர்வு 11 பேர் கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக தா.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.