புதுச்சேரி, ஆக.25- புதுச்சேரியில் கொசு தொல்லைகளை கட்டுப்படுத்தவும், கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா முதலான நோய்களை கட்டுப்படுத்தவும் டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். கொசு உற்பத்தி அதிகரிக்கும் இடங்களான தேங்கி யுள்ள நீர்நிலைகள், புதர்கள் மண்டி கிடக்கும் இடங்கள் முதலானவை கண்டறியப்பட்டு இந்த இடங்களில் டிரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை உள்ளாட்சித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரவைத்தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயணன், உள்ளாட்சித் துறை இயக்குநர் சக்திவேல், உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் சௌந்தரராஜன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர் கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், நலவழித்துறையின் மலேரியா ஒழிப்பு உதவி இயக்குநர் மருத்துவர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.