districts

சென்னை முக்கிய செய்திகள்

ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதியுதவி

சென்னை, ஜூன் 3 - சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் வள்ளுவர் கோட்டம் டாடா மேஜிக் நிறுத்த தலைவர் வி.எம். நடராஜன் திங்களன்று (ஜூன் 3) காலமானார். அவரது உடலுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே. முருகேஷ், பொதுச் செயலாளர் எம்.உதயகுமார், பொருளாளர் எம்.முரளி, ஆட்டோ சங்க மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சங்கத்தின் சார்பில் ரூ.12 ஆயிரம் நிதியுதவி வழங்கினர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சென்னை, ஜூன் 3- சென்னை வேளச்சேரியில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி இறந்தார். வேளச்சேரி அருகே உள்ள ஜல்லடியன்பேட்டை பழனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகு (46). இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ரகு ஞாயிற்றுக்கிழமை அங்கு காற்றுடன் மழை பெய்தபோது, வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது வீட்டின் மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த கம்பி திடீரென அறுந்து ரகு மீது விழுந்தது. இதில் பலத்தக் காயமடைந்த ரகு சம்பவ இடத்திலேயே பலியானார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் குடும்பத்தினர் இதுகுறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரகு சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பனை கத்தியால்  குத்தியவர் கைது

சென்னை, ஜூன் 3- போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கத்தியால் சரமாரியாக குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் ராஜசேகர் (40). இவர் தனது நண்பர் வியாசர்பாடி காந்திபுரம் பகுதியை சேர்ந்த விநாயகம் (25) என்பவருடன் மது குடித்துள்ளார். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆனால் விநாயகம் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜசேகரை குத்தியதில் காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வியாசர்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விநாயகத்தை கைது செய்தனர். விநாயகம் மீது ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு

செங்கல்பட்டு,ஜூன் 3- செங்கல்பட்டு அடுத்த திருமணி கோழி பண்ணை குடியிருப்பு பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் ஞாயிறன்று துர்நாற்றம் வீசியது.   இதனை உணர்ந்த அப்பகுதி மக்கள் மருத்துவமனை வளாகத்தின் உள்ளே சென்று பார்த்த போது குப்பை மேட்டில் ஒரு ஆண் சடலம் கிடப்பது தெரியவந்தது. இறந்து போன அந்த நபர் 55 வயது மதிக்கத்தக்கவர் என்பதும், அவர் மூன்று நாட்கள் முன்பே இறந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் எந்த பகுதியை சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இடிதாக்கி 6 கடைகள் தீக்கிரை

திருவண்ணாமலை, ஜூன்3- திருவண்ணாமலையில் ஞாயிறன்று (ஜூன்3)  காலை முதல் வெயில் சுட்டெரித்தது. இரவு 10.45 மணி முதல் அதிக  சூரை காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.  இரவு 11 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது இம் மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அப்போது அங்கிருந்த ஒரு சைக்கிள் கடை  மீது இடி விழுந்தது, அந்த இடி தீயாகப் பரவி அந்தப் பகுதி யில் உள்ள கடைகள் மற்றும் பிளாஸ்டிக் உபகரணங்கள் விற்கப்படும் சில்லறை கடைகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தத் தீ விபத்தில், அந்தப் சுற்று வட்டார பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  அந்தப் பகுதியில் கரும்புகை  கிளம்பியது.    இந்த தீயை அணைக்கும்  பணி அதிகாலை 2 மணி வரை நீடித்தது.

காணாமல் போன ஆசிரியர் எலும்பு கூடாக கண்டெடுப்பு

கடலூர், ஜூன் 3 - கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டையில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அரியலூர்  மாவட்டம், ஆண்டிமடம் சேர்ந்த விக்டர் (40) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மேலும் விக்டர் தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால் பல ஆண்டுகளாக பிரிந்து  வாழ்ந்து வந்தார். கடந்த மே 18ஆம் தேதி வெளியில் சென்ற விக்டர் வீட்டிற்கு  வரவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது. இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிப் புலியூர் காவல் நிலையத்தில் கடந்த மே 27 ஆம் தேதி விக்டர்  காணவில்லை என புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் விக்டரின் செல்போன் குறிஞ்சிப்பாடியில் பகுதியில் கடைசியாக சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது தெரியவந்தது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அந்த பகுதிக்கு சென்று கடைசியாக விக்டருடன் பேசிய தட்சிணாமூர்த்தி என்ற  நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.  இந்த விசாரணையில் ஆசிரியர் விக்டர் தனது உறவினர் திருமணம் ஆகாத பெண்ணுடன் பழக்கத்தில் இருந்ததாகவும்  அதனால் கோபமுற்று குறிஞ்சிபாடி யில் அவரை தாக்கியதில் இறந்துவிட்டதாக தட்சிணாமூர்த்தி கூறினார். மேலும் விக்டரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி  நெய்வேலி டவுன்ஷிப் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு பின்புறத்தில் வீசிவிட்டு வந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது எலும்புக்கூடுகள் இருந்தன. எலும்பு களை சேகரித்து பிரேத பரிசோதனைகளுக்காக விழுப்புரம்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தட்சிணாமூர்த்தியிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மல்லர் கம்பம் பயிற்சி நிறைவு

கடலூர்,ஜூன் 3- கடலூர் மாவட்டம், மல்லர் கம்பம் கழகம் மற்றும் பண்ருட்டி திருவதிகை மாமல்லன் மல்லர் கம்ப கிளப் இணைந்து நடத்திய கோடைகால இலவச பயிற்சி முகாம்  நிறைவு விழா நடைபெற்றது. திருவதிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் மாநில மல்லர் கம்ப பொதுச்செயலாளர் துரை  செந்தில்குமார், மாநில மல்லர் கம்ப தலைவர் ஜனார்த்தனன்,  கடலூர் மாவட்ட மல்லர் கம்ப கழகத்தின் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் அசோகன், செயலாளர் கார்த்திக், இணைச் செயலாளர் பாபு, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக மல்லர் கம்ப பயிற்றுநர் மல்லன் ஆதித்தன், உடற்கல்வி திட்ட இயக்குநர் செந்தமிழன் அன்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பயிற்சி முடித்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விளையாட்டு சீருடைகள் வழங்கினர்.