சென்னை, அக். 13 - சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பஞ்சாயத்து பகுதிகளை பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கட்சியின் சோழிங்கநல்லூர் தொகுதி 14வது மாநாடு ஞாயிறன்று (அக்.13) காரப்பாக்கத்தில் நடைபெற்றது. மாநாட்டில், சோழிங்கநல்லூர் தொகுதியில் பன்னோக்கு மருத்துவமனை அமைப்பதோடு, ஈஞ்சம்பாக்கத்தில் மூடப்பட்ட அவசரசிகிச்சை மையத்தை மீண்டும் திறக்க வேண்டும். இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும், கண்ணகி நகருக்கு பேருந்துகளை அதிகரிக்க வேண்டும், செம்மஞ்சேரியில் மின்விளக்குகள் அமைப்ப தோடு, எழில்நகரில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தை மீட்டு சதுப்பு நிலமாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொகுதிக்குழு உறுப்பினர் எம்.ஆர்.சுரேஷ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். செங்கொடியை தொகுதிக்குழு உறுப்பினர் கே.குணசேகரன் ஏற்றினார். காரப்பாக்கம் கிளைச் செயலாளர் வி.பானுபிரியா வர வேற்றார். தொகுதிக்குழு உறுப்பினர் ஆர்.சாந்தாதேவி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். வேலை அமைப்பு அறிக்கையை தொகுதி செயலாளர் ப.ஜெயவேலுவும், வரவு செலவு அறிக்கையை தொகுதிக்குழு உறுப்பினர் கோ.பூங்காவனமும் சமர்ப்பித்தனர். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சுந்தர், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.விஜயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு தேர்வு 11 பேர் கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக ப.ஜெயவேல் தேர்வு செய்யப்பட்டார்.