சென்னை, நவ. 30- திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட 4ஆவது வார்டு மிகவும் தாழ்வான பகுதியாகும். மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் சாலை களில் தேங்கி நிற்கும், வீடுகளிலும் தண்ணீர் புகுந்துவிடும். வெள்ளிக்கிழமை இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இந்நிலையில் பாலாஜி நகர் அருகே செல்லும் குடிநீர் பைப் உடைந்ததால் பாலாஜி நகர் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் மோட்டார் மூலமும், டாங்கர் லாரி மூலமும் தண்ணீரை வெளி யேற்றினார். அதேபோல் திருவீதி யம்மன் நகர் 6ஆவது தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரும் ட்ராக்டர் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது. மேட்டுத் தெருவில் இரண்டு ட்ராக்டர் மோட்டார்கள் 100 எச்.பி. மோட்டார் மூலம் தேங்கிய நீர் அகற்றப்பட்டு வருகிறது. விபி நகர், ஜோதி நகர் மேம்பாலம், ஆதிதிராவிடர் காலணி, திருவீதியம்மன் நகர் என பக்கிங்காம் கால்வாய் கரை மீது 5 மோட்டார்கள் வைத்து மழைநீர் அகற்றப்படுகிறது. ஜோதி நகர் 6ஆவது தெருவில் விழுந்த மரம் உடனடியாக அகற்றப்பட்டது. ஆதி திராவிடர் காலணி மக்கள் 1,000 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் 4ஆவது வார்டு உதவி பொறியாளர் சஞ்சீவிராவ், மதன்ராஜ் மாநகராட்சி ஊழியர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கருணாநிதி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் கே. வெங்கடையா, தனலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.