districts

சென்னை முக்கிய செய்திகள்

திருவொற்றியூர் 4ஆவது வார்டில் ஜனவரிக்குள் சாலைகள் அமைக்கப்படும்: மேயர் பிரியா

சென்னை, செப். 29- திருவொற்றியூர் 4ஆவது வார்டில் வரும் ஜனவரிக்குள் 40 சாலைகளும் அமைக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வெள்ளியன்று (செப். 29) மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் கேட்ட கேள்வியும், மேயர் அளித்த பதில்களும் வருமாறு; திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் 89 சாலைகள் தார் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைத்திட மண்டலக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாநகராட்சி சாலை பணிகள் துறைக்கு அனுப்பட்டது. ஏற்கெனவே சாலைகள் குறித்து கேட்ட கேள்விக்கு, 55 சாலைகள் ஒப்பந்தம் கோரப்படும் நிலையில் உள்ளது. மழைக்கு முன்னர் சாலை பணிகள் முடிக்கப்படும் என்று பதில் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை 22 சாலைகளுக்கு மட்டுமே பணி உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற 67 சாலைகளுக்கு எப்போது ஒப்பந்தம் கோரப்படும். பணிகள் எப்போது துவங்கப்படும் என கேள்வி எழுப்பினார். கேள்விக்கு பதிலளித்த மேயர், தற்போது 22 சாலைகள் பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது மட்டுமின்றி முல்லை நகர் முதல் தெரு, மகாலட்சுமி நகர் 3ஆவது தெரு, திருவீதியம்மன் நகர் 5ஆவது குறுக்கு தெருக்களுக்கும் பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 21 சாலைகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அந்த சாலைகளுக்கும் விரைவில் பணி உத்தரவு வழங்கப்படும். மேலும் 40 சாலைகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு வரும் ஜனவரிக்குள் அனைத்து சாலைகளும் தரமாக அமைத்து தரப்படும் என்று தெரிவித்தார்.

சிங்கத்தை  காண ஏசி பேருந்து: வண்டலூரில் ஏற்பாடு

செங்கல்பட்டு,செப்.29- வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களை அருகில் காண ஏசி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் லயன்சபாரி  வருகிற அக் 2 அன்று தொடங்கப்பட்ட உள்ளது. இதற்காக 3 ஏசி பேட்டரி பேருந்துகள்  இயக்கப்படுகிறது.  இந்த வாகனத்தில் செல்ல ஒருநபருக்கு ரூ 150 கட்டணம் வசூலிக்கப்படும்.  மாணவர்கள், சிறார்கள், முதியோருக்கு இது ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சென்னை,செப்.29- தாம்பரம்-வேளச்சேரி சாலையின் இருபுறமும்  கட்டிடங்கள், விளம்பர போர்டுகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் இதனால் போக்குவரத்து பாதிப்பதாகவும் எழுந்த புகாரையொட்டி  நெடுஞ்சாலைத்துறையினர் வெள்ளியன்று  ஜேசிபி மூலம் சுமார் 200 கடைகளை  அகற்றினர்.

சக்தி-2023 கருத்தரங்கம்

கல்பாக்கம்,செப்.29- இஷ்ரே  பொறியாளர்கள்  கூட்டமைப்பு, இந்திய பெண் விஞ்ஞானிகள் சங்கம் மற்றும் இந்திரா அணு ஆராய்ச்சி மையம் சார்பில் கல்பாக்கத்தில் சக்தி - 2023 என்ற கருத்தரங்கை நடத்தியது. இந்திரா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் வெங்கட்ராமன் தலைமையில இஷ்ரே தேசிய தலைவர் யோகேஷ் தக்கர், சுற்றுச்சூழல் சுகாதார பொறியியல் துறை தலைவர் கல்பனா ஆகியோர் பங்கேற்றனர். பாதுகாப்பு ஆராய்ச்சி, பசுமை தொழில் நுட்ப ஆராய்ச்சி, காற்றின் மாசுபாட்டை  கண்காணித்து குறைப்பது  உள்ளிட்ட ஆய்வுகள், திட்டங்கள் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி உயர்கிறது மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

சென்னை, செப். 29 - தற்காலிக சுகாதார மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி 687 ரூபாயாக உயர்த்தி வழங்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்றக் கூட்டம் மேயர் ஆர். பிரியா தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றி திரியும் மாடுகள் முதன் முறையாக பிடிக்கப்பட்டால் 5 ஆயிரம் ரூபாயும், மீண்டும் பிடிக்கப்  பட்டால் ஆயிரமும்  அபராதமாக வசூலிக்கப்படும். தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மொத்தம் 2 ஆயிரத்து 873 பணியாளர்கள் பல்வேறு சுகா தார பணிகள் மற்றும் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி ரூ.522 லிருந்து 687 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், மாமன்ற உறுப்பினர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த 4 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த பணியாற்றுவதோடு, தண்ணீர் தேங்கி உள்ளதை அப்புறப்படுத்த வேண்டும்.சமூக வலை தளங்கள் வாயிலாகவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

காலமானார்

திருவள்ளூர்,செப்.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டக் குழு உறுப்பினர் முகமது சாதிக்கின்  தகப்பனார் அகமது இப்ராஹிம் (வயது 78), காலமானார். உடலுக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன்,   வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ்,  வட்டக் குழு உறுப்பினர்கள் இரஹிமா,  கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், கிளை செயலாளர்கள் கபீர்பாஷா, நல்லம்மாசுபேதா உள்ளிட்ட பலர்  அஞ்சலி செலுத்தினர். மறைந்த அகமது இப்ராஹிம் உடலை மாலை ஆரம்பாக்கம் கபர்ஸ்தானில்  அடக்கம் செய்யப்பட்டது. 

தாம்பரம் மாநகராட்சியுடன்  இணையும் 15 பஞ்சாயத்துக்கள்

சென்னை,செப்.29- தாம்பரம் மாநகராட்சி  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. தற்போது 87.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 70 வார்டுகளுடன் 5 மண்டலங்களாக உள்ளது. சுமார் 10 லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ளது. நிர்வாக வசதிக்காகவும் மக்கள் நலனுக்காவும் மேலும் 15 பஞ்சாயத்துக்களை இணைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  அதனடிப்படையில் அகரம்தென், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், முடிச்சூர், கவுல்பஜார், பெரும்பாக்கம், நன்மங்களம், திரிசூலம், பொழிச்சலூர்,ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, வேங்கைவாசல், முவரசம்பட்டு, மதுரபாக்கம், சிட்டலப்பாக்கம் ஆகிய பஞ்சாயத்துக்கள்  தாம்பரம் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 115சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கும். இந்த இணைப்பின் மூலம்  மாநகராட்சி  எல்லைக்குள் கூடுதலாக 6லட்சம் பேர்  வர உள்ளனர்.

தாமரைப்பாக்கம் அணை நிரம்பியது

திருவள்ளுர்,செப்.29- பூண்டி ஏரியிலிருந்து 3210 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பாய்கிறது. இந்த உபரி நீர் மெய்யூர், ராஜபாளையம் தரைப் பாலத்தை மூழ்கடித்து தாமரைப்பாக்கம் அணைக் கட்டு பகுதிக்கு வருகிறது. இந்த நீர் திருக்கண்டலம், இருளிப்பட்டி, ஜெக நாதபுரம், வன்னியம் பாக்கம், வல்லூர் அணைக் கட்டு, நாப்பாளையம், மணலிபுதுநகர், இடையஞ் சாவடி, சடையங்குப்பம் வழி யாக எண்ணுர் முகத்து வாரத்தில் கடலில் கலந்து வருகிறது. பருவமழையையொட்டி  பொதுப்பணித்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

உலக ‘ரேபிஸ் நோய்’ தடுப்பு உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி, செப்.29- கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆணையர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.  இதில் நகர பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய் அல்லது தெரு நாய்கள் கடித்தால், கீறினாலோ உடனடியாக கடித்த இடத்தை சோப்பால் சுத்த மாக கழுவிட வேண்டும். மேலும், அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவ மனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு தவறாமல் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது என விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

விவசாய நிலங்களில் மின் வேலி: காவல்துறை எச்சரிக்கை

விழுப்புரம்,29- விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் வெளியிட்ட செய்திகுறிப்பில், விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை  வனவிலங்குகளிட மிருந்து பாதுகாக்க நிலத்தின் உரிமையாளர்கள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக மின்சார வேலிகள் அமைக்கப்படுகின்றன. இந்த மின்சார வேலியில் எதிர்பாராத விதமாக மனிதர்கள் மற்றும் வன உயிரினங்கள் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக, சட்டத்திற்கு புறம்பாக விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

சாலை  விரிவாக்கத்தில்  குளறுபடி

கடலூர், செப்.29- கடலூர் முதல் மடப்பட்டு வரை சாலை  விரிவாக்க பணி நெடுஞ்சாலை துறை சார்பில்  ரூ.230 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. நெல்லிக்குப்பத்தில் இரண்டு கிலோ  மீட்டர் தூரத்தில் சாலையை விரிவாக்கம் செய்வதில் சிலரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு குறுகலான சாலைகள் அமைக் கப்பட்டுள்ளது. அதிகாரிகள் முறையாக அளவீடு செய்யாமல், ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை அமைப்பதாக குற்றம் சாட்டி  அனைத்து கட்சி, பொதுநல அமைப்புகள் சார்பில் நெல்லிக்குப்பத்தில் உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் கோ.மாதவன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். முன்னாள் மதிமுக மாவட்டச் செயலாளர்  ராமலிங்கம், முன்னாள் விசிக மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தன், நகர அதிமுக செயலாளர் காசி நாதன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்  தலைவர் திலகர், மார்க்சிஸ்ட் கட்ச யின் பகுதி செயலாளர் ெஜயபாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், சமுக ஆர்வலர்  குமரவேல், த.வா.க. கார்த்திக்,  கடலூர் மாந கராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.

காவல் நிலையத்தில் பெண் தற்கொலை அதிகாரிகளே பொறுப்பு: சிபிஎம்

புதுச்சேரி, செப். 29- காலாப்பட்டு காவல் நிலையத்தில்  தீ வைத்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி பிள்ளைச்சாவடி கங்கையம்மன் வீதியைச் சேர்ந்தவர் மீனவர் சந்திரன். அவரது மனைவி கலைச்செல்வி. காலாப்பட்டு காவல் நிலையத்தில் பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக சென்றுள்ளனர்.  அப்போது காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகள், கடன் வாங்கிய ஏழுமலை என்பவரை இருக்கையில் அமர வைத்து கடன் கொடுத்த சந்திரனை அவமானபடுத்தி வெளியே போகுமாறு கூறியதாக கூறப்படுகிறது. மேலும் காவலர்கள் முன்னிலையில் உன் பணத்தை கொடுக்க முடியாது என்று ஏழுமலை தெரிவித்திருக்கிறார். காவல் நிலையம் வந்தும் தங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் காவல்துறையின் மோசமான நடத்தையால் மனமுடைந்த சந்திரனின் மனைவி கலைச்செல்வி தீ வைத்துக் கொண்டுள்ளார்.  உடனடியாக, ஜிப்மர் மருத்துவமனை யில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. கலைச்செல்வி தற்கொலைக்குக் காலாப்பட்டு காவல்துறையினர் தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே இந்த கொலைக்கு காரணமான காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநிலக் குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் பல முறை வெளிப்பட்ட போது சில காவல்துறை யினர் திருந்துவதாக இல்லை. இச்சம்பவத்தால் காவல் நிலையம் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர். காவல்துறையில் நடைபெற்று வரும் தொடர் கட்டபஞ்சாயத்து களால் புதுச்சேரி மக்கள் தொடர் துன்பங்களையும், பொருள் இழப்புகளையும், உயிர் இழப்புகளை அனுபவித்து வருகின்றனர்.  இதுகுறித்து பலமுறை பல்வேறு வழிகாட்டுதல்கள் நீதிமன்ற உத்தரவுகள் வந்தபோதும் புதுச்சேரி காவல்துறையில் உள்ள சிலர் மாறுவதாக இல்லை. இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அரசின் ஆதரவு முக்கிய காரணமாக இருக்கிறது.  எனவே புதுச்சேரி அரசு சம்பந்தப்பட்ட காவலர்கள் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.