மதுராந்தகம், ஜூலை 26- மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாகவும் இயங்கி வரும் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் அரசு டாஸ்மார்க் கடை இயங்கி வருகின்றது. இந்த மதுக்கடையால் மதுராந்தகம் நகரத்திற்குவருகின்ற பள்ளி, கல்லூரி மாணவர்களும் தினசரி வேலைக்கு செல்லக்கூடிய பெண்களும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கும் ஆளாகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கும் போக்கு வரத்திற்கும் இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து மாதர் சங்கத்தின் சார்பில் மதுராந்தகம் வட்டத் தலைவர் கே.வனிதா தலைமையில் கையெழுத்து இயக்கம் வியாழனன்று(ஜூலை 25) நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜி.ஜெயந்தி, வட்ட செயலாளர் எம்.இந்திரா வட்டக் குழு உறுப்பினர் பவளமல்லி, பஞ்சவர்ணம், நாச்சியம்மாள், உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.