districts

img

ரேசன் கடைகளை திறக்கும் வரை புதுச்சேரியில் சிபிஎம் போராட்டம் ஓயாது

புதுச்சேரி,பிப்.22- ரேசன் கடைகளை திறக்கும் வரை மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் ஓயாது என்று ஜி.ராமகிருஷ்ணன் புதுச்சேரி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன்கடைகளை திறந்து அத்தியா வசிய பண்டங்களை வழங்கக்கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் திங்களன்று ( பிப்.19)  துவங்கி நடை பெற்றது. இந்நிலையில் தட்டாஞ்சாவடி குடிமை பொருள் வழங்கல் துறை அருகில் 4 வது நாளாக தொடர்ந்து நடைபெறும் இந்த போராட்டத்திற்கு பாகூர்,வில்லியனூர் இடைகமிட்டி செயலாளர்கள் சரவணன், ராம மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கி னர்.  இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்  பங்கேற்று   பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் 25கோடி மக்களை வறுமையில் இருந்து ஒன்றிய அரசு மீட்டுள்ளதாக கூறுவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பாகும். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து மக்கள் அன்றாடம் வாழ்க்கை நடத்துவதே சிரமப்படுகின்றனர். இன்றைக்கு விலைவாசி உயர்வால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையாக உள்ளது.   15லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி யில் ரேசன் கடைகளை மூடிவைத்து ஒன்றிய பாஜக அரசு வேடிக்கை பார்க்கிறது. அரிசி, பருப்பு விலைகள் கடுமையாக உயர்ந்துவிட்டது. அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளம்,ஆந்திரா போன்ற மாநிலங்களில் ரேசன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய  பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது.  புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு   ரேசன் கடைகளை மூடிவைத்துள்ளது கண்டனத்திற்கு உரியது. ஒன்றிய பாஜக அரசு ரேசன் கடைகளை மூடிவைத்து புதுச்சேரியை பரி சோதனை கூடமாக மாற்றுவதை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. ரேசன் கடைகளை திறக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் போராட்டம் ஓயாது என்று ஆட்சியாளர்களுக்கு ஜி.ராம கிருஷணன் எச்சரிக்கை விடுத்தார். சாலை மறியல் முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரேசன் கடை திறப்பு செய்தி  வெளியாகும் என்ற அறிவிப்பு எதிர்பார்த்திருந்த நிலை யில்,கூட்டத்தொடரில் ரேசன்கடை திறப்பு குறித்து எந்தவித  அறி விப்பும் வெளியாகாததால்  மார்க்சிஸ்ட்கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தட்டாஞ்சாவடி ஈசிஆர் சாலை யில் நடைபெற்ற இந்த மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி,ராம கிருஷ்ணன், மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனு வாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், சத்தியா,கலியமூர்த்தி,மூத்த தலைவர் முருகன்,மாநிலக்குழு உறுப்பினர்கள் உட்பட பலரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.