சென்னை, ஏப். 22 - கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாம்பழ வரத்து அதி கரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. இருப்பினும் மாம்பழங்களை பொதுமக்கள் வாங்காததால் அவை அழுகுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மாம்பழ சீசன் காலமாகும். இதனால் கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா, ஓசூர், சேலம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழ வரத்து உள்ளது. சீசன் ஆரம்பித்த நேரத்தில் குறைந்தளவில் மாம்பழ வரத்து இருந்தது. அப்போது, சுமார் 30 லாரிகளில் மாம்பழம் வந்தது. கிலொ 120 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 30 முதல் 50 லாரி களில் 200 டன் மாம்பழம் வரத்து உள்ளது. இதனால் விலை கடுமையாக குறைந்து கிலொ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இருப்பினும், மாம்பழம் வாங்க வியாபாரி களும், பொதுமக்களும் வாங்குவதில்லை. இதனால் தினமும் மாம்பழங்கள் குவியல் குவியலாக அழுகி குப்பைக்கு செல்லும் அவல நிலை உள்ளது. மாம்பழ சீசன் தொடங்கிய நேரத்தில் பங்கனபலி, செந்தூரா பழங்கள் 100 - 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, வரத்து அதிகரிப்பால் கிலொ 50 ரூபாயாக வீழ்ந்துள்ளது. அதையும் வாங்க ஆட்கள் இல்லை. இதனால் மாம்பழங்கள் அழுகி தினமும் குப்பை தொட்டியில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.