districts

சென்னை முக்கிய செய்திகள்

மாதவரம் விளாங்காடுபாக்கம் முதல்  பாரிமுனைக்கு விடியல் பயண பேருந்து

சென்னை, ஜன. 23- மாதவரம் தொகுதிக்குட்பட்ட விளாங்காடுபாக்கம் முதல் பாரிமுனை போன்ற நகரங்களுக்கு விடியல் பயண பேருந்து மற்றும் சிற்றுந்து இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பகுதிச்செயலாளர் வி.கமலநாதன் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சன் இடம் மனு அளித்தார். அந்த மனுவில், தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டு தொடங்கிய பெண்கள் விடியல் பயணம் பேருந்தை 54 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பிற்காக நகரத்திற்கு வருவதால், அவர்களது குடும்பம் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. மாதவரம் தொகுதிக்குட்பட்ட நாரவாரி குப்பம் பேரூராட்சியுடன் அழிஞ்சிவாக்கம், கிராண்ட்லைன், புள்ளியான், சென்றம்பாக்கம், தீர்த்தக்கரையம்பட்டு, வடகரை, விளாங்காடுபாக்கம், பொத்தூர், பம்மதுகுளம் போன்ற ஊராட்சிகளை இணைத்து நாரவாரிகுப்பம் நகராட்சியாக உருவாக்க தமிழக அரசு 31.12.2024இல் அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி நாரவாரிகுப்பம் நகராட்சியில் 2011 மக்கள் தொகை கணக்கின்படி 54,934 பேர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. தங்களது தொகுதிக்குட்பட்ட கொசப்பூர், மஞ்சம்பாக்கம், விளாங்காடுபாக்கம், சிறுகாவூர், பெருங்காவூர், அருமந்தை கூட்டு சாலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போதுமான அரசு பேருந்து வசதி இல்லை. மேற்கூறிய பகுதியிலிருந்து பாரிமுனை செல்வதற்கு காலை, மாலை தலா 2 நடைகள் மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே மேற்கூறிய பகுதிகளிலிருந்து மாதவரம் வெளியூர் பேருந்து நிலையம் மற்றும் பாரிமுனை ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளும், பெண்கள் விடியல் பயணம் பேருந்து, சிற்றுந்து இயக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த மாதம் முதல்  தனியார் மினி பேருந்து இயக்க அனுமதி

சென்னை, ஜன.23- சென்னையில் பிப்ரவரி  மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை அனுமதி அளித்துள்ளது. கூடுதலாக பேருந்து சேவை தேவைப்படுவதால் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னையில் அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கிண்டியில் வேலை வாய்ப்பு முகாம்

சென்னை, ஜன.23- சென்னையின் அனைத்து வேலைவாய்ப்பு மையங்களும் இணைந்து கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இன்று (ஜன.24) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை மற்றும் அறிவியல், ஐடி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவர்கள் பங்கேற்கலாம். 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைதேடும் இளைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். பங்கேற்க விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேசன் கார்டில் பெயர் சேர்க்க,  நீக்க நாளை சிறப்பு முகாம்

சென்னை, ஜன.23- சென்னையில் வருகிற சனிக்கிழமையன்று (ஜன.25)  சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ரேசன் கார்டுகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம் முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சென்னையில்  சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் 12 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ள இந்த முகாம்களில் பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகள் குறித்தும் கோரிக்கைகள் இருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குழந்தையை கடத்தியவர்களுக்கு ஆயுள் தண்டனை   சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஜன.23- செனாய் நகரை சேர்ந்த தம்பதியின் 3 வயது குழந்தை பள்ளியில் படித்து வந்தார்.  2019 ஜூலை 18ம் தேதி பள்ளி முடிந்து வேனில் வந்து இறங்கிய குழந்தையை, தம்பதியின் வீட்டில் வேலை பார்த்து வந்த வேலைக்கார பெண் அம்பிகா (24), நண்பர் கலிமுல்லாஷேட் (30) காரில் கடத்தினர். இதை தொடர்ந்து குழந்தையின் பெற்றோரிடம் ரூ.60 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, குழந்தையை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை மீட்ட போலீசார், அம்பிகா, கலிமுல்லாஷேட் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குழந்தையை கடத்திய இருவருக்கு ஆயுள் தண்டனையும் 4ஆயிரம் ருபாய் அபராதமும்  விதித்து தீர்ப்பளித்தார்.

உழைப்பாளி மக்களுக்கு எதிரான  நடவடிக்கைகளை உறுதியுடன் எதிர்ப்போம்!

வடசென்னை வரவேற்புக்குழு அமைப்பு கூட்டத்தில் பெ.சண்முகம் பேச்சு

சென்னை, ஜன. 23- உழைப்பாளி மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை உறுதியுடன் எதிர்ப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார். சிபிஎம் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறுவதையொட்டி வடசென்னை மாவட்ட வரவேற்பு அமைப்புக் கூட்டம் புதனன்று (ஜன. 22) ஓட்டேரியில் தோழர் ஏ.பி. நினைவகத்தில் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். ராயபுரம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி வர வேற்றார்.  தலைவராக எஸ்.கே.மகேந்திரன், செயலாளராக எம்.ராமகிருஷ்ணன், பொருளாளராக வி.ஜானகிராமன் உள்ளிட்ட 210 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசு கையில், வகுப்புவாத சக்திகளை முறியடிக்க பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்டி களம் காண்பது என்று மாநில மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறைந்த எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சிக்கு வந்த இந்த 10 மாத காலத்தில் அவர்களின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த காலத்தை விட தற்போது வகுப்பு வாத கொள்கைகளை, மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை மிகத் தீவிர மாக நடைமுறைபடுத்தி வருகிறார் கள். வகுப்புவாத, மதவெறி சக்தி களை தனிமைப்படுத்தும் வகையில், மதச்சார்பற்ற கட்சிகளை அணி திரட்ட வேண்டியுள்ளது.  வரவேற்பும் எதிர்ப்பும் பல்கலைக்கழக மானியக் குழு புதிய விதிகளுக்கு எதிராக ஒத்த கருத்துடைய மற்ற மாநில முதல மைச்சர்கள் எல்லாம் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநில சட்டப்பேரவையில் அதற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்  பேரவையில் தீர்மானம் நிறை வேற்றினார்கள். அதேபோல் மாநில உரிமைகளை பறிக்கும் நட வடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபடும் போது, திமுக அரசு உனடி யாக தனது எதிர்ப்பை பதிவு செய்கிறது. இதுபோன்ற நட வடிக்கைகளை வரவேற்கிறோம். உழைப்பாளி மக்களின் நலன் சார்ந்த விஷயங்களில் பாஜக அரசின் கொள்கைகளை தமிழகத்திலும் நடை முறைபடுத்து வதை எதிர்க்கிறோம். வர்க்க நலனில்  சமரசம் கிடையாது தமிழகத்தில் 99 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறி வருகிறார்கள். ஆனால் மாற்றுத்திறனாளிகள், போக்குவரத்து ஊழியர் என அனைத்து தரப்பினரும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடிக் கொண்டிருக்கிறார்கள். உழைப்பாளி, விவசாயி, ஏழை மக்களுக்கு பாதிப்பை உரு வாக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. வர்க்க நலனை பாதுகாப்பதில் யாருடனும் எந்த சமரசமும் கிடையாது என்பதில் கட்சி உறுதியாக இருக்கிறது. ஏற்றுக்கொள்ளமுடியாத  நடவடிக்கைகள் புதிய தாராளமயக் கொள்கை யால் உலகளவில் நிரந்தரப் பணி என்பது கேள்விக்குறியாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் வேலையின்மை பெரும் பிரச்சனையாக உருவெடுத் துள்ளது. படித்த இளைஞர்களுக்கு அரசுத் துறையில் நிரந்தரப் பணி இல்லை என்ற வகையில் அர சின் செயல்பாடுகள் உள்ளன. பல்லாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நிரந்தரப் பணி யிடங்களை ஒழித்துக் கட்டி விட்டு, அனைத்து பணிகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமனம் செய்வது அல்லது அவுட்சோர்சிங் மூலம் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு பதில், அதை எப்படி அமல்படுத்துவது என்று குழு அமைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் போது அதை எதிர்க்கிறோம், அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம். அகில இந்திய மாநாட்டை யொட்டி மதுரையில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து முதலமைச்சர்களையும் அழைத்து மாநில அரசின் உரிமைகள் பறிப்பு, அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிராக ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதி ராக கருத்தரங்கம் நடத்த வுள்ளோம். மாவட்டம் முழுவதும் கலைக்குழுக்கள், கருத்தரங்கம் என பல்வேறு வகையான விரி வான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோரும் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.நித்தியராஜ் நன்றி கூறினார்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கடை உரிமையாளருக்கு  20 ஆண்டுகள்  சிறை

விழுப்புரம், ஜன.23-  கடைக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகை கடை உரிமையாளருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாத்தனூர் கிராமத்தில் வசித்து வருபவர்.முகமது ஹாஜி மகன் நசீர் பாஷா (42). இவர் தனது வீட்டின் முன்புற பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 5.11.2017 அன்று அவரது கடையில் பொருட்கள் வாங்க வந்த  8 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.  இதனை அந்த சிறுமி அழுது கொண்டே வந்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் நசீர் பாஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில், நசீர்பா ஷாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட நசீர் பாஷா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் செயற்கை கை,கால் பொருத்தும் திட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.23–  போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு முறிவு மற்றும் முட நீக்கவியல் பிரிவின் கீழ் செயற்கை கை, கால் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.   கல்லூரி முதல்வர் மு.பூவதி தலைமை வகித்தார்.கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன்,மருத்துவக் கண்காணிப் பாளா் சந்திரசேகரன்  முன்னிலை வகித்தனா். இது குறித்து கல்லூரி முதல்வா் பூவதி கூறுகையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் பிரிவின் கீழ் செயற்கை கை,கால் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  பெரும் விபத்து, சர்க்கரை வியாதி, ரத்தக் குழாய் பாதிப்புகளால்  கை, கால்களை இழந்த நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து சிகிச்சைக்குப் பின் செயற்கையான கை மற்றும் கால்களை பொருத்தி நோயாளிகளுக்கான மறுவாழ்வு சிகிச்சை முறை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  முதல் பயனாளியாக கிருஷ்ணகிரியை அடுத்த சுண்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 77 வயது சின்னதம்பிக்கு செயற்கை கால் வெற்றிகரமாக பொருத்தி நடக்க வைக்கப்பட்டார். தனியார் மருத்துவ மனையில் செயற்கை கால் பொருத்து வதற்கு குறைந்தபட்சம் 2 லட்சம் வரை செலவாகும்.ஆனால் இங்கு இலவசமாக பொருத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள பொதுமக்கள் இத்திட்டத்தில் பயன்பெற பயனாளர்கள் காப்பீடு அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற மூன்று ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்றார். உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் செல்வராஜ், தினேஷ், எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் பிரிவு துறை இணைப் பேராசிரியர்கள், அறுவை சிகிச்சை பிரிவு இணைப் பேராசிரியர் சதாசிவம், மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலர் சரவணன் உடன் இருந்தனர்.