கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சென்னையில் பயனாளிகள் பட்டியல் தயார்
சென்னை,செப்.11- கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளை தேர்வு செய்ய தமிழகம் முழுவதும் 3 கட்டமாக சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் நடத்தப்பட்டன. சென்னையில் இத்திட்டம் மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2 கட்டமாக ரேஷன் கடைகள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியான பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1,727 சிறப்பு முகாம்கள் மூலம் 9 லட்சத்து 58 ஆயிரத்து 807 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஏற்கனவே வேறு திட்டங்களில் பயன்பெறக் கூடிய பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டதால் அவர்கள் விண்ணப்பிக்கவில்லை. மொத்தமுள்ள 1428 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களில் முறையான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் தெரிவிக்காமல் இருந்த குடும்ப தலைவிகள் வீடுகளில் மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியானவர்களை பயனாளிகள் பட்டியலில் சேர்த்தனர். பெறப்பட்ட மனுக்களில் எல்லாவற்றையும் ஆய்வு செய்யாமல் சந்தேகமாக இருந்த, உரிய தகவல் இல்லாத விண்ணப்பதாரர்களின் வீடுகளில் மட்டும் நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு உள்ளதா? அவை நடப்பில் செயல்பாட்டில் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று முடிந்துள்ளது. விண்ணப்பித்த பெரும்பாலான பெண்களின் வங்கி கணக்கு முறையாக இருந்ததால் எவ்வித பிரச்சினையும் எழவில்லை. அதன் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனி ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது. இதற்கான பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் 9 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 இந்த மாதத்தில் இருந்து வழங்கப்படும். வருகிற 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 9 லட்சத் திற்கும் மேலானவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்றனர்.
கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைத்திடுக
திருப்போரூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு,செப்.11- திருப்போரூரில் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம் அறிவிக்கப்பட்டு வட்டாட்சியர் அலு வலகம், நீதிமன்றம் ஆகியவை அறிவித்து செயல்பட்டு வரும் நிலையில் நிர்வாக வசதி மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு திருப்போரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வந்தது. 2500 போக்குவரத்து வாகனம் 7500 போக்குவரத்து அல்லாத வாகனமும் இருந்தால் வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் அமைத்து தர முடியும் என்று சட்டமன்றத்தில் துறையின் அமைச்சர் கொடுத்த விளக்கத்தின்படி, லட்சக்கணக்கான வாகனம் புழங்கும் திருப்போரூர் ஒன்றியத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்போரூர் ஒன்றியத்தில் நகர மயமாக்கலும் மக்கள் தொகையும் பெருகிவரும் நிலையில் வண்டலூர் தாலு காவையும் திருப்போரூர் தாலுகாவையும் இணைத்து தனி கோட்டமாக அறிவிக்க வேண்டும். திருப்போரூர் ஒன்றியத்தில் 500 க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுடன் மக்கள் தொகையும் பெருகிவரும் நிலை யில் தற்போது செங்கல்பட்டில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுவர 40 கி.மீ பயணிக்க வேண்டியுள்ளது. எனவே நிர்வாக வசதிக்காகவும் மக்கள் பயன்பெறும் வகையிலும் திருப்போரூரில் தனி கோட்டாச்சியர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வட்ட செயலாளர் எம்.செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், கே.பகத்சிங் தாஸ், கே.வாசுதேவன்,வட்டக்குழுஉறுப்பினர் கே.லிங்கன் உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினருமான எம்.சின்ன துரை கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினார்.
கஞ்சா வைத்திருந்த புதுச்சேரி வாலிபர்கள் கைது
விழுப்புரம்,செப்.11- விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த புதுச்சேரி வாலிபர்கள் 4பேரை போலீசார் கைது செய்தனர். ஆரோவில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது சவுக்கு தோப்பு அருகே 4 வாலிபர்களிடம் காவல் துறையினர் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முர ணான தகவலை கூறி னர். இதனால் சந்தேக மடைந்த போலீசார், அவர்கள வைத்திருந்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. விசாரணையில் புதுவை மாநிலம் எல்லைப் பிள்ளைச்சாவடியை சேர்ந்த தீபக் (வயது 25), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஆல்பர்ட் (29), நேரு நகரை சேர்ந்த வெங்கடேசன் (30), சக்தி நகரை சேர்ந்த மணி கண்டன் (32) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்க ளிடமிருந்து கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள், 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
மயிலாப்பூரில் வாலிபர் அடித்து கொலை
சென்னை, செப்.11- சென்னை, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(வயது32). ஏசி மெக்கானிக். ஞாயிறன்று இரவு அவர் மந்தவெளி ரயில் நிலையம் அருகில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்றார். இரவு சாமி ஊர்வலம் நடைபெற்ற போது தினேசுக்கும், அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ் மயங்கி கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அபிராமபுரம் காவல்நிலை யத்தினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளி பார்த்திபனை கைது செய்த னர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்ப தாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ஆற்றுக்குள் கார் மூழ்கியது நகைக்கடை உரிமையாளர் மனைவி பலி
சிதம்பரம், செப்.11- சிதம்பரம் கீழ வீதி வீதியில் மாலன் ஜுவல்லரி நகைக்கடை உரிமையாளர் மங்கேஷ்குமார் மனைவி சுபாங்கி (47),இவர் திங்களன்று கார் ஓட்டும் பயிற்சியை பிச்சாவரத்தில் மேற்கொண்டார். இந்நிலையில் தெற்கு பிச்சாவரம் அருகே உள்ள பாலம் அருகே சென்று விட்டு மீண்டும் சிதம்பர நோக்கி காரை சுபாங்கி ஓட்டி வந்துள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள உப்பனாற்றுக்குள் பாய்ந்தது. காருக்குள் சுபாங்கி மட்டும் மாட்டிக்கொண்டார்.இதில் கார் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. இதில் சுபாங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காருக்குள்ள இருந்த சுபாங்கி உடலை மீட்டனர். மேலும் இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.