காஞ்சிபுரம்,ஆக.10-
காஞ்சிபுரம், உத்திரமேரூர் நெடுஞ் சாலையில் உள்ள வெங்கடாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.
இருளர் இனத்தை சேர்ந்த இவரது மனைவி காமாட்சி (வயது 28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவத்திற்காக 4 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கணவர் மூர்த்தி அழைத்து வந்திருந்தார்.
காமாட்சியை பரிசோதித்த மருத்து வர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினர். அதன் பேரில் காமாட்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மூர்த்தியும் அவரது 3 வயது மகன் சக்திவேலும் உடன் இருந்தனர்.
இந்த நிலையில் காமாட்சிக்கு உதவி செய்வதற்காக மூர்த்தியின் உறவினர் குலாம்மாள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் அவரது 6 வயது மகள் சவுந்தர்யாவும் இருந்தாள்.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு மர்ம பெண் சக்திவேலுடனும், சவுந்தர்யாவுட னும் நெருங்கி பழகினார். அவர்களை அழைத்து சென்று மருத்துவமனையின் பல்வேறு இடங்களையும் சுற்றி காண்பித்தார். மூர்த்தியும், குலாம்மாளும் பேறு கால பிரிவில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் இரு வரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நம்பினர்.
செவ்வாயன்று இரவு அந்த மர்ம பெண் சக்திவேல், சவுந்தர்யா இரு வரையும் தனது அருகில் படுக்க வைத்துக் கொண்டார். இரண்டு நாட்கள் தங்களுடன் இருந்ததால் மூர்த்தி யும் அந்த பெண்ணை நம்பினார். புதனன்று காலை அந்த மர்ம பெண்ணும், இரண்டு குழந்தைகளும் மாயமாகி இருந்தனர்.
இதையறிந்து மூர்த்தியும், குலாம்மாளும் கடும் அதிர்ச்சி அடைந்த னர். மருத்துவமனை வளாகம் முழுக்க தேடி பார்த்தனர். மர்ம பெண் பற்றி மருத்துவமனையில் விசாரித்தபோது யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.
பாசமாக பழகிய அந்த மர்ம பெண்தான் இரு குழந்தைகளையும் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மர்ம பெண் பற்றி அறிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அப்போது மருத்துவமனை வளா கத்தில் உள்ள பல சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதாகி இருப்பது தெரிய வந்தது.
சில சி.சி.டி.வி. கேமராக்கள் மட்டுமே இயங்கின. அதில் உள்ள காட்சிகளை பார்க்க முயற்சி செய்த போது மின்சார தடை காரணமாக பதிவுகள் அனைத்தும் அழிந்து போயிருப்பது தெரிய வந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சி உதவி கள் கிடைக்காததால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை சுற்றி வந்த மர்ம பெண் பற்றிய தகவல்கள் போலீசாருக்கு முழுமையாக கிடைக்க வில்லை. அந்த பெண் திட்டமிட்டு குழந்தைகளுடன் பழகி கடத்தி சென்றிருப்பது உறுதி படுத்தப் பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளை கடத்திய மர்ம பெண் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த பெண் 2 குழந்தைகளையும் எங்கே கடத்தி சென்றிருப்பார் என்பதும் தெரியவில்லை. அந்த பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.