கள்ளக்குறிச்சி, மார்ச் 2 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 3 லட்சம் பேர் கலந்து கொண்டு ரூ.40 லட்சம் மதிப்பில் 58,000 ஆயிரம் புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள விஎம் திடலில் 3ஆவது கல்லை புத்தகத் திருவிழா பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கி 23 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. புத்தகத் திருவிழாவை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்,சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். புத்தகத் திருவிழாவில் காலை முதல் மாலை வரை பள்ளிக் கல்லூரி மாணவர்கள், சுய உதவி குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன. மாலையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த நட்சத்திரப் பேச்சாளர்களின் கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெற்றது. கல்லை புத்தகத் திருவிழாவில் மொத்தம் 38.818 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், 2,61, 784 பொதுமக்களும் என மொத்தம் 3,00,602 நபர்கள் கலந்து கொண்டு ரூ.40,12,692 மதிப்பீட்டிலான 58,112 எண்ணிக்கையிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர். புத்தகத் திருவிழா நடைபெற்ற விழா அரங்கில் பல்வேறு வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி சிறப்பு மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி, உணவகங்கள், நடமாடும் கோளரங்கம், சிறுவர் சிறுமியர் பொழுதுபோக்கு அம்சங்கள், உடனுக்குடன் தூய்மைப் பணி, இருசக்கர/நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம்,கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது. புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்,உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.