புதுக்கோட்டை என்ற பெயரைக் கேட்கும்போது பலரின் மனதில் முதலில் தோன்றும் கருத்து, “அது ஒரு வறண்ட பிரதேசம்” என்பதே. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இன்னும் சற்று ஆழமாக நோக்கினால், புதுக்கோட்டை ஐந்து வகையான நிலங்களும் ஒன்றிணைந்த ஒரு பிரதேசம் என்பது தெளிவாகும். குளத்தூர் மற்றும் திருமயம் பகுதிகளை முல்லை நிலமாகவும், ஆவுடையார்கோவில் மற்றும் அறந்தாங்கி பகுதிகளை நெய்தல் நிலமாகவும், ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை மருத நிலமாகவும் கருதலாம். இவை அனைத்தும் பெரும் பாலான காலங்களில் வறண்டு காணப் படுவதால், பாலை நிலம் என்றும் சொல்ல லாம். இந்த வறண்ட பிரதேசத்தில்தான் கலை, இலக்கியம் மற்றும் வரலாறு செழித்து வளர்ந்துள்ளது. புதுக் கோட்டையின் வரலாற்றுச் சுவடுகள் மிகவும் சுவாரஸ்யமானவை.
புதுக்கோட்டையின் வரலாற்று முக்கியத்துவம்
1947 ஆகஸ்ட் 15 இந்தியா விடுதலை அடைந்த நாள். ஆனால், சில சமஸ்தானங்கள் உடனடியாக இந்தியா வுடன் இணையவில்லை. புதுக்கோட்டை சமஸ்தானமும் அவற்றில் ஒன்று. புதுக்கோட்டை மன்னர் ராஜகோபாலத் தொண்டைமான் ஆட்சியில் இருந்த போது, சர்தார் வல்லபாய் படேல் பேச்சு வார்த்தை நடத்தி, புதுக்கோட்டையை இந்தியாவுடன் இணைத்தார். இந்த நிகழ்வு 1948 மார்ச் 3 அன்று நடந்தது. புதுக்கோட்டை தமிழ்நாட்டின் 15வது மாவட்டமாக உருவான போது, தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து அறந்தாங்கி, கீரமங்கலம் மற்றும் கந்தர்வகோட்டை போன்ற பகுதிகள் புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டன.
தொன்மையான வரலாறு
புதுக்கோட்டையின் வரலாறு கற்காலத்திற்கு முந்தையது. இங்கு இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். திருமயம் வட்டாரத்தில் உள்ள குருவிக் கொண்டான் பட்டியில் இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. 500 முதல் கி.பி. 100 வரையிலான பெருங்கற் கால சான்றுகள் பொற்பனைக் கோட்டைப் பகுதியில் கிடைத்துள்ளன. கடையெழு வள்ளல்களில் ஒருவனான பாரி வள்ளல் ஆண்ட பிரான்மலைப் பகுதி புதுக் கோட்டை மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியாகும். பழைய பெயர்கள் புதுக்கோட்டையின் ஆதிப் பெயர் பன்றிநாடு என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், பு.சி.தமிழரசன் போன்ற சிலர் இதை மறுத்து, பன்றியூர் நாடு என்பதே சரி யான பெயர் என்று கூறுகின்றனர். பல்ல வர்கள் காலத்தில், ஆறாம் நூற்றாண்டில் இப்பகுதி கவிரநாடு என்று அழைக்கப் பட்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் புதுக்கோட்டை என்ற பெயர் அதிகாரப் பூர்வமாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை நகரின் மையத்தில் உள்ள சாந்தார் கோவிலின் கல்வெட்டு இதை உறுதிப் படுத்துகிறது. கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் புதுக்கோட்டையில் பல கோட்டை கள் உள்ளன. பொற்பனைக் கோட்டை, திருமெய்யம் கோட்டை, நெம்மக் கோட்டை போன்றவை அவற்றில் குறிப்பிடத் தக்கவை. 17ஆம் நூற்றாண்டில் புதுக் கோட்டையை ஆண்ட ரகுநாதத் தொண்டைமான் நகரின் மையப்பகுதி யில் ஒரு கோட்டை கட்டி, அதைச் சுற்றி 3 கி.மீ. நீளமுள்ள சுவர் அமைத்தார். இந்த கோட்டையின் காவல் வாயில்கள் “வாடி” என்று அழைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று இன்றும் “மச்சுவாடி” என்ற பெயரில் உள்ளது.
புதுக்கோட்டையின் கலாச்சாரம் மற்றும் கலை
புதுக்கோட்டை கலை, இலக்கியம் மற்றும் ஆன்மீகத்தின் மையமாக விளங்குகிறது. இங்கு ஆடல், பாடல், இசை, நாடகம், ஓவியம் மற்றும் சிற்பம் போன்ற நுண்கலைகள் செழித்து வளர்ந்துள்ளன. சித்தன்னவாசல் ஓவி யங்கள் உலகப் புகழ்பெற்றவை. இவை பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது. இந்த ஓவியங்கள் அஜந்தா ஓவியங்களை விட நுட்பமானவை என்று கூறப்படுகிறது. இசை மற்றும் இலக்கியம் புதுக்கோட்டையில் இசை மற்றும் இலக்கியம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. குடுமியான் மலைக் கல்வெட்டு தமிழ் இசை மரபுகளைப் பற்றிய முக்கியமான சான்றுகளை வழங்குகிறது. இந்த கல்வெட்டு ஏழாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டது. இது தமிழ் இசை மற்றும் கர்நாடக இசைக்கு இடையேயான தொடர்பைக் காட்டுகிறது. புதுக்கோட்டையில் தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பல இலக்கியப் படைப்புகள் உருவாகி யுள்ளன. விறலியின் காதல், விராலி மலைக் குறவஞ்சி, சிவந்தெழுந்த பல்ல வன் பிள்ளைத் தமிழ் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. சமயப் பொறை புதுக்கோட்டையில் சமயப் பொறை மிகுந்துள்ளது. நார்த்தாமலை அம்மனுக்கு முஸ்லிம் பெரியோர்கள் புத்தாடை வழங்குவது போன்ற பல சமய ஒற்றுமை நிகழ்வுகள் இங்கு நடை பெறுகின்றன. காட்டுப்பாவா பள்ளி வாசலில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வழிபடுகின்றனர்.
சமூக மற்றும் கல்வி முன்னேற்றம்
புதுக்கோட்டை சமூக மற்றும் கல்வி துறையில் மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், முதல் பெண் சட்டசபை உறுப்பினருமான திருமதி முத்துலட்சுமி ரெட்டி இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்த மண்ணில், பல கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. காத்து நிற்போம் புதுக்கோட்டை தமிழ்நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கலையின் முக்கியமான மையமாக விளங்குகிறது. இந்த மண்ணில் பல்வேறு நாகரிகங்கள், சமயங்கள் மற்றும் கலை வடிவங்கள் ஒன்றிணைந்து செழித்து வளர்ந்துள்ளன. புதுக்கோட்டையின் தனித்துவமான அடையாளங்களை எந்நாளும் பாதுகாத்து நிற்போம். இன்று மார்ச் 3 1948 புதுக்கோட்டை சமஸ்தானம், இந்தியாவுடன் இணைந்த நாள்
கட்டுரையாளர் : தமுஎகச மாநிலத் துணைத் தலைவர்