districts

img

தீண்டாமையை ஏற்க முடியாது

திருவனந்தபுரம், செப்.22-  மனிதரிடையே தீண்டாமையைக் கடைப்பிடிக்க கூறும் எந்த முறையையும் ஏற்றுக் கொள்ள முடியாது என கேரள தேவசம் (அறநிலையத்துறை) அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோயில் நிகழ்ச்சியில் தனக்கு எதிரான சாதிய பாகுபாடு விவகாரத்தில் அகில கேரள தந்திரி சமாஜத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பூஜை முடியும் வரை பூசாரி யாரையும் தொடக்கூடாதா என்று அமைச்சர் கேட்டார். இச்சம்பவம் கோவிலுக்குள் நடக்கவில்லை. கோயிலுக்கு வெளியே கூட்டமாக வந்து தீபம் ஏற்றப்படுகிறது. அப்போது பூசாரி மக்களைத் தொடவில்லையா என்று அமைச்சர் கேட்டார். கோயில் விழாக்களுக்கு நான் செல்வது இது முதல்  முறையல்ல. இதற்கு முன் எப்போதும் இப்படி பார்த்ததில்லை. அர்ச்சகரிடம் பணம் கொடுத்தால் உள்ளே கொண்டு செல்ல மாட்டாரா?. அப்படியென்றால், பணத்திற்கு தீண்டாமை இல்லை, மனிதனுக்கு தீண்டாமை  உண்டு. இதைத்தான் நான் பேச முயற்சித்தேன்’ மனிதர்களுக்குள் தீண்டாமையை கற்பிக்கும் எந்த நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீண்டாமை அவசியம் என்று நினைப்பவர்கள் இருக்கலாம். அப்படிச் சொல்ல அவர்களுக்கு உரிமை உண்டு. அந்த  உரிமையை மறுக்கவில்லை. ஆனால் அதை அனுமதிக்க முடியாது என்று சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு. கோட்டயத்தில் ஒரு சமூதாய அமைப்பின் நிகழ்ச்சி யில் பங்கேற்றபோது நல உதவிகள் அதிகரித்து வருவது குறித்து பேசினேன். அதன் தேவை குறித்தும் பேசியபோது வெறும் நல உதவிகள் மட்டும் பிரச்சனை க்கு தீர்வாகாது என்பதை குறிப்பிட்டேன். நீடிக்கும் பாகுபாடுகள் குறித்து பேசுகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறினேன். அண்மைக்காலமாக இத்தகைய போக்கு அதிகரித்துள்ளது. கூலி உயர்வு கேட்டதன் பேரில் நகங்கள்  பிடுங்குவதை நம்பிக்கை என்று கூறினால் அதை ஏற்க முடியாது. நாட்டில் அதிகரித்து வரும் தலித் வேட்டை யாடல் கேரளத்திலும் நடக்கக் கூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளத்துக்கு அவமானம் : சிபிஎம்

தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் ஜாதி பாகுபாட்டை எதிர்கொள்ள நேர்ந்தது கேரளாவுக்கு அவமானம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கேரள மாநில செயற்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  கேரளத்தில் ஒரு காலத்தில் தீண்டாமை உள்ளிட்ட சாதிய ஒடுக்குமுறைகள் தலைவிரித்தாடின. மறுமலர்ச்சி, தேசிய, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலையீட்டின் ஒரு பகுதியாக சாதிப் பாகுபாடு பிரச்சனைகள் பொதுவாக மறைந்தன. வரலாற்றுக் காரணங்களால் உருவான சமூகப் பாதகச் சிக்கல்கள் சமூகத்தில் நிலவுகின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான வலுவான பணிகள் மாநில அரசின் தலைமையில் நடைபெறும் போது இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. பையனூரில் உள்ள நம்பியதாரா கோவிலில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் சாதிப் பாகுபாடை அனு பவித்தார். சாதிப் பாகுபாடு அடிப்படையிலான இத்தகைய செயல்களை ஒழிக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நடந்தது என்ன?

ஆறு மாதங்களுக்கு முன்பு பையனூரில் உள்ள நம்பியதாரா கோவில் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ராதா கிருஷ்ணன் பங்கேற்றார். கர்ப்ப கிரகத்துக்கு வெளியே குத்துவிளக்கு ஏற்ற தயாராக நின்ற அமைச்சரிடம் தீபத்தை கொடுக்காமல் கோயில் தந்திரியும், உதவியாளரும் குத்து விளக்கு ஏற்றியபின் தீபத்தை கீழே  வைத்தனர். அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் ஒரு தலித் என்பதால் அவர் அவமதிக்கப்பட்டார். மனத்தில் ரணமாக நீடித்த இந்த சம்பவத்தை கடந்த சில தினங்க ளுக்கு முன்பு கோட்டயத்தில், ஒரு சமுதாய அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் குறிப்பிட்டார். அப்போது பேசிய அவர், பையன்னூர் கோவிலில் நடந்த சம்பவம் ஒரு தனி மனிதருக்கு ஏற்பட்ட பிரச்சனை யாக பார்க்கவில்லை. சமூகம் முழுமைக்கும் ஏற்பட்ட தாகும். எனக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்பது பிரச்சனை அல்ல. சாதி உணர்வு ஏற்படுத்திய மனதளவிலான பாதிப்பை உடனடியாக ஒரே நாளில் மாற்ற இயலாது. அது மனதில் படிந்த ஒரு கறையாகும். சாதி உணர்வும் மத உணர்வும் எழும்போது, மனிதர்க ளின் அடிப்படைப் பிரச்சனைகளில் இருந்து விலகி நிற்க நம்மைத் தூண்டுகிறது. கேரளத்திலும் பலரது மனதில் சாதி உணர்வு இப்போதும் உள்ளது. அதை வெளிப்படுத்தி னால் சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்பதால்தான் வெளிப்படவில்லை. கோயிலில் நடந்த சம்பவத்தை பெரும் விவாதமாக்க விரும்பவில்லை. இத்தகைய சம்பவங்களை கேரள பொதுச் சமூகம் ஏற்காது. குருவாயூர் கோயிலில் நடக்கும் கிருஷ்ண ஆட்டத்தில் முன்பு ஏழைக் குழந்தைகள் பங்கேற்க அனுமதிப்ப தில்லை. சபாநாயகராக இருந்தபோது அங்கு நடந்த நிகழ்ச்சியில் அதற்கு எதிராக வினையாற்றினேன். அதன் பிறகு மாற்றம் ஏற்பட்டது. தீண்டத்தகாத மனித னின் பணத்துக்கு தீண்டாமை இல்லை. இந்த பணம் பலரது கைகளைக் கடந்து வருகிறது. ஏதேனும் ஒரு சாதியினர் மட்டும் நினைத்தால் பாகுபாடுகளை அகற்ற முடியாது. அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். ஆலய நுழைவில் முன்னணியில் நின்று செயல் பட்டது சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று கூறப்படு வோர்தான். பொதுப்பாதையில் நடப்பதற்கான உரி மைக்காக படை திரட்டியதும் அவர்கள்தான் என அமைச்சர் கூறினார்.

சாதி உணர்வுக்கு எதிராக கேரளம்

கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி கூறுகையில், அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு எதிரான பாகுபாடு, முற்போக்கு கேரளத்தை இழிவுபடுத்துவதாகும். இதற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உட்பட பலரும் அமைச்சருக்கு எதிரான சாதிப் பாகுபாட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர்.  சாதிப் பாகுபாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சாதிவெறி போன்ற அனைத்து வகையான அநீதிக ளுக்கும் எதிரான போராட்டத்தை வாலிபர் சங்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும் வாலிபர் சங்க மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில்தான்  தீண்டாமை பாராட்டிய தந்திரியை பாதுகாக்க அகில கேரள தந்திரி சமாஜம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டு தீண்டாமைக் கொடுமையை நியாயப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.