விழுப்புரம்,ஆக.24-
மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கும் வரும் பொதுமக்களிடம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் கிடைத்துள்ளது.
மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் வைத்து நடத்தி வரும் பால மணிகண்டன் என்பவர் சார் பதிவாளர் அலுவலகத்தின் தரகராக பணியாற்றி பொதுமக்களிடம் லஞ்சப் பணத்தை அவ்வப்போது வாங்கி கொடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், புதன்கிழமை(ஆக.23) இரவு சுமார் 9.30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான காவலர்கள் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு திடீரென புகுந்து, பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ. 3.60 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர், சார் பதிவாளர் சங்கீதா மற்றும் இடைத் தரகர் பால மணிகண்டன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நள்ளிரவு வரையில் நடைபெற்றது. பிறகு, முக்கிய கோப்புகளுடன் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றனர்.