districts

மதுரவாயலில் மகனை தாயே கொன்றார்

சென்னை,ஆக.20-

     மதுரவாயல் அடுத்த புளியம்படு பகுதியை சேர்ந்தவர் அரி. டிரைவர் இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் பூவரசன் (23). மணப்பாக்கம் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சனிக்கிழமையன்று காலை பூட்டிய வீட்டுக்குள் செல்வி, அவரது மகன் பூவரசன் இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பூவரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல்துறையினர் செல்வியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மன அழுத்தத்தில் இருந்து செல்வி தனது மகன் பூவரசனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு தன்னையும் தாக்கி கொண்டது தெரிய வந்தது.  

    செல்வி கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதற்காக அரி தனது சொந்த ஊரான அரக்கோணம் அருகே உள்ள பள்ளூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டிருந்தார்.

     இந்த நிலையில் வெள்ளியன்று இரவு அரி வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அப்போது தூக்கம் வராமல் அதிக மன அழுத்தத்தில் இருந்த செல்வி அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகன் பூவரசனை இரும்பு கம்பியால் அடித்து கொன்றார். பின்னர் செல்வி தன்னை தானே தலையில் தாக்கி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.