districts

img

தரமற்ற வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும்

மதுராந்தகம், ஜூலை 9- வடபட்டினம் கிராமத்தில் பழங்குடியின இருளர் மக்களுக்கு தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் வீடுகளை இடித்துவிட்டு தரமான முறையில் புதிய வீடு களை கட்டித்தர வலியுறுத்தி மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது  செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் வடபட்டினம் ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்கரை பகுதியில் 21 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடி இருளர் இன மக்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்  இந்நிலையில் 2022- 23 நிதி ஆண்டில் அம்மக்களுக்கு நிரந்தர வீடு கட்டி தருவதற்காக வடபட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள தோப்பு புறம்போக்கு இடத்தில் வகை மாற்றம் செய்து பட்டா வழங்கி வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டுவதற்கான பணிகளும் ஒப்பந்ததாரர் மூலமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிகள் தரமற்ற நிலையில் இருப்பதாக பழங்குடி இருளர் இன மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுவதாகவும் கட்டும்போதே சுவர்கள் ஆடுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 24 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் இந்த கோரிக்கையை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றனர். மேலும் இந்த கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.   இந்நிலையில் வடபட்டினம் கிராம இருளர் இன மக்களுக்கு கட்டுப்பட்டு வரும் வீடுகளை இடித்து விட்டு தரமான வீடுகளை கட்டித் தர வேண்டும், தற்போது நடைபெற்று வரும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும், ஊழலில் ஈடுபட்ட அரசு அலு வலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பவுஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பன்னீர் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.   கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். அழகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டச் செயலாளர் எஸ்.ரவி, திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் எம்.குமார் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி. ஹரிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் வாசுதேவன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் கார்வேந்தன் உள்ளிட்ட பலர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் ஆகியோர் பேசினார்.  இதனைத் தொடர்ந்து நடை பெற்ற பேச்சு வார்த்தையில் தற்போது நடைபெற்று வரும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும்  உரிய ஆய்வுக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் எழுத்து பூர்வமாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக முடித்து கொள்ளப்பட்டது.