புதுச்சேரி, டிச. 30 - மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தக் கோரி புதுச்சேரி முழுவதும் மனித சங்கிலி இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு நிறைவேற்ற வேண்டும். புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், 10,000 அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும், ஏஎப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை புனரமைத்து வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும், குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும், கிராமப்புற 100 நாள் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை குறைந்த வாடகைக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. புதுச்சேரி திருக்கனூர் கடைவீதியில் சிபிஎம் கொம்யூன் செயலாளர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்தில் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், ரெயின்போ நகரில் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், உழவர்கரை நகரக் குழு செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி, காமராஜர் சிலை எதிரே மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். காந்தி வீதி, முத்தியால்பேட், முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, இலாஸ்பேட்டை, வில்லியனூர், கரிகலாம்பாக்கம், மதகடிப்பட்டு, பாகூர் மற்றும் காரைக்கால், மாகே ஆகிய பகுதிகளில் இந்த போராட்டம் நடைபெற்றது.