பசுமை கட்டிட காங்கிரஸ் மாநாடு 2023 சென்னை, நவ.17- கார்பன் உமிழ்வை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் பசுமை தொழில்நுட்பங்களை கொண்டு கட்டிடங்களை அமைக்கவும் உதவும் வகையில் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) இந்திய பசுமை கட்டிட சபை சார்பில் சென்னையில் பசுமை கட்டிட காங்கிரஸ் மாநாடு நடைபெறவுள்ளது. பசுமை கட்டிட காங்கிரஸ் 2023 நிகழ்வின் இணை தலைவரும், ஐஜிபிசி – சென்னை கிளையின் தலைவருமான அஜித்குமார் சோர்டியா, ஐஜிபிசி சென்னை கிளையின் இணை தலைவர் திரு. மகேஷ் ஆனந்த் மற்றும் சிஐஐ – ஐஜிபிசி – ன் துணை செயலாக்க இயக்குனர் மு. ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் மாநாட்டிற்கான முன்னெடுப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பசுமைக் கட்டிட காங்கிரஸ் நவம்பர் 23 முதல் நவம்பர் 25 வரை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நிகழ்வின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள கண்காட்சியில் 500க்கும் புதுமையான பசுமை தயாரிப்புகள், கட்டிட பணிக்கான மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன என்று அஜித்குமார் சோர்டியா கூறினார்.