விழுப்புரம்,ஆக.5-
விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சி.பழனி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
நம் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்க வும், விசைத்தறியாளர்கள் மற்றும் துணி ஆலைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து கைத்தறியாளர் களை பாதுகாக்க வும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வும், ஒன்றிய அரசு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 இயற்றப் பட்டு, விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையாக கொண்ட துணை இயக்குநர், அமலாக்க அலுவலகம், சென்னை, குறளகம் 2ஆம் தளத்தில் செயல்பட்டு வருகிறது.
கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்ட பிரிவு 5ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீடுகளுடன் 11 இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, விசை தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன் படி தண்டனைக்குரிய செயலாகும்.
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பது குறித்து அமலாக்கப் பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வின்போது கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆறு மாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை வழங்கப்படும். எனவே விழுப்புரம் மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.