districts

img

ஈசூர்-வல்லிபுரம் அருகே பாலாற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளநீர்

மதுராந்தகம், டிச.3- மதுராந்தகம் அருகே பாலாற்றில் ஈசூர்-வல்லிபுரம் இடையே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் பெஞ்சல் புயல் காரணமாக மழைநீர் நிரம்பியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஈசூர்-வல்லிபுரம் அருகே உள்ள பாலாறு, பல்வேறு கிராமங்களுக்கு விவசாயம் உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஆற்றில், கடந்த 2019 ஆம் ஆண்டு வரை மழை காலங்களில் தண்ணீர் சேமிக்க இயலாமல் கடலுக்கு சென்றபடி இருந்தது. தடுப்பணைகள் இல்லாத காரண மாக கரைகளின் இருபுறங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு நிலத்தடி நீர் குறைந்து விவ சாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் தட்டுபாடு ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் சிபிஎம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் பல தொடர் போராட்டங்களும் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஈசூர், வல்லிபுரம் இடையில் பாலாற்றின் குறுக்கே சுமார் 750 மீட்டர் நீளத்துக்கு 5 அடி உயரத்தில் ரூ.30 கோடி செலவில் தடுப்பணை கட்டும் பணி பிப்ரவரி மாதம் தொடங்கி அந்த ஆண்டு இறுதியில் முடிந்தது. இதைதொடர்ந்து, தற்போது, இப்பகுதியில் பெய்து வரும் பருவ மழையால், தடுப்பணை முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. தடுப்பணை அமைந்துள்ள பகுதியில் இருந்து, அதன் பின் பக்கவாட்டில் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஈசூர், பூதூர், பள்ளிப்பட்டு, படாளம் ஆகிய கிராமங்கள் வரை சுமார் 3 கிமீ தூரத்துக்கு பாலாற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மேலும் விவசாயிகள் கூறுகையில், பாலாற்றில் இவ்வளவு தண்ணீர் இருப்பதை தற்போது காண முடிகிறது. இதனால், ஆற்றின் இரு கரைகளில் அமைந்துள்ள பல கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள், சாதாரண பெரிய கிணறுகள், சிறு நீர் நிலைகளின் நீர் மட்டம் உயரும். கரும்பு மற்றும் நெல் விவசாயத்துக்கு பெயர் பெற்ற இந்த பகுதி முன்புபோல விவசாயத்தில் செழிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது என தெரிவித்தனர்.