கடலூர், நவ.28 – மீன்வளத்துறை அறிவிப்பையும் மீறி கடலுக்கு சென்றதால், படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கி தவித்த கடலூர் தைக்கால் தோணித்துறை கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்களும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். கடலூர் மாவட்டத்தில், வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என கடலூர் மாவட்ட மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி தைக்கால் தோணித்துறை கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்கள் 2 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகில் புதன்கிழமை அதி காலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கடல் மிகுந்த சீற்றத்துடன் இருந்ததால் இவர்கள் சென்ற படகு கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்தது. அதில் மணி கண்ணன், தமிழ், சாமிதுரை, மணிமாறன், தினேஷ், சற்குணன் ஆகிய 6 மீன வர்கள் லேசான காயமடைந்தனர். இவர்கள் சித்திர பேட்டை அருகில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் இறங்குதளத்தில் ஏறி உயிர் தப்பினர். கடல் சீற்றம் அதிகமாக உள்ள தால் அது குறைந்த பின்னர் கரை திரும்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மீனவர்கள் உள்ள இடத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் 2ம் நாளாக அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. கடல் கொந்தளிப்பால் படகு மூலம் மீட்க முடியாத சூழ்நிலை இருந்ததால் தொடர்ந்து கப்பல் இறங்குதளத்தில் சிக்கிய மீனவர்கள் ஒவ்வொருவராக ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு பத்திரமாக கரையில் இறக்கி விடப்பட்டனர். கடலில் இருந்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் 6 பேரும் பத்திரமாக திரும்பியதால் மகிழ்ச்சி தெரிவித்தனர். இனி அரசு, மீன்வளத்துறை எச்சரிக்கையை உதா சீனப்படுத்த மாட்டோம் என அவர்கள் உறுதி தெரிவித்தனர். எச்சரிக்கையை மீறி கடலுக்குள் செல்ல மாட்டோம் என மீனவர்கள் உறுதியளித்தனர்.