திருவள்ளூர், பிப் 15- திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளியன்று (பிப் 14), நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் விவசாயிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பெரும்பாலான கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய அதிகாரிகள் வராததால் விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைகழிக்கப்படுகிறார்கள். தனியாக சந்தித்து குறைகளை கூறினாலும் கண்டு கொள்வதில்லை. எனவே அதிகாரிகள் பங்கேற்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்று கூறினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சி.பெருமாள், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.