கடலூர், ஜூன் 5-
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கூடலூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் இந்த தடுப்பணை வெள்ளாற்றில் ரூ.15.77 கோடியில் கட்டப்பட்டது. இதனால் 4.14 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்க முடியும்.
இந்த தடுப்பணையை ஒட்டியுள்ள வெள்ளாற்றங்கரை மழைக் காலங்களில் சேதம் அடைந்து கரை பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் வெள்ளாற்றங்கரை பகுதி வழியாக விவசாயிகள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் கரையின் ஓரம் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் கரையில் நடந்து செல்லும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பொதுப்பணித்துறையினர் கரையோரம் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மழையால் சேதமடைந்துள்ள வெள்ளாற்றங்கரையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.