districts

img

விவசாயிகள் சங்க போராட்டம் எதிரொலி: இருளர் குடியிருப்புக்கு மின்விளக்கு!

கிருஷ்ணகிரி, பிப்.28 - சூளகிரி வட்டம், உப்பரதம்மன்டரப்  பள்ளி கணபதி நகரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் 3 தலைமுறைகளாக 52 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஓபே பாளையம் கிராமத்தில் சென்று வர பாதை,மின்விளக்கு,குடிநீர் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் 20 இருளர் பழங்குடியினர் 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். துப்புகானப்பள்ளி என்.சங்கரய்யா நகரில் 12 குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுக்கப்பட்டு வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தெரு விளக்கு குடிநீர்,பாதை வசதி கள் செய்து தரப்படவில்லை. காமன் தொட்டி அருகே தட்சண திருப்பதி யில் 26 இருளர் குடும்பங்களுக்கு ஒரு பாதிக்கு மட்டும் சிமெண்ட் சாலை அமைத்து விட்டு பாதியை விட்டுவிட்டனர்.  பஸ்தலப்பள்ளியில் குடிநீர் குழாயில் பாதி நாட்கள் காற்றுதான் வருகிறது.ஊராட்சி வார்டு உறுப்பி னரை கேட்டால் நீங்கள் எனக்கு ஓட்டு போடவில்லை அதனால் குடிநீர் வராது எனக் கூறுகிறார்.குடிக்க கூட நீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை காத்திருப்பு போராட்டம் நடத்திய போதும் கடிதம் மூலம் இக் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்த அரசு அதிகாரிகள் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அசைவற்று இருக்கின்றனர். அரசு அதிகாரிகளே ஓபே பாளையம் பழங்குடி மக்களிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. பலமுறை கடிதம் மூலம் ஒத்துக் கொண்டு அரசு அதிகாரிகள் எதுவும் செய்யாத நிலையில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் முரளி தலைமையில் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.  மாநிலச் செயலாளர் பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ்,பொருளாளர் எம்எம்.ராஜு விளக்கி பேசினர். மாவட்டத் துணைத் தலைவர் அண்ணாமலை,துணைத் தலைவர் முனியப்பா,அடிமனை பயனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் அனுமப்பா,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்தகுமார்,மாதர் சங்க மாவட்ட தலைவர் சரஸ்வதி,மார்க்சிஸ்ட் கட்சி சூளகிரி வட்ட செயலாளர் முருகன், வாலிபர் சங்க துணைத் தலை வர்கள் குண்டப்பா ராஜப்பா கலந்து கொண்டனர்.  அரசு அதிகாரிகளுடன் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் ஓபே பாளையம் பழங்குடியினர் காலனிக்கு உடனடியாக மின் விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சானமாவு,ஓபேபாளையம், கொம்பே பள்ளி, சங்கரய்யா நகர்,தட்சண திருப்பதி,பஸ்தலப்பள்ளி பட்டியலின மக்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளுக்கு கள ஆய்வு செய்து, மதிப்பீடு அனுப்பி மாவட்ட ஆட்சி யர் அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ள விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,கடிதம் மூலம் உறுதியளித்தனர்.