வேலூர், ஜன.23 - குடியாத்தம் வன சரகத்திற்கு உட்பட்ட கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கியதில் பலியான பட்டதாரி பெண்ணின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் வன சரகத்திற்கு உட்பட்ட கே.வி.குப்பம் ஒன்றியம் துருகம் கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த பட்டதாரி இளம்பெண் அஞ்சலி குடும்பத்திற்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அவரது குடும்ப ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குடியாத்தத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்வுக்கு வருகை தந்த வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன் மனு அளித்தார். மேலும், வனவிலங்கு தொல்லையில் இருந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும். ஒலி எழுப்பும் கண்காணிப்பு கருவிகள் வன ஓரங்களில் பொருத்த வேண்டும், கூடுதல் வன ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஓசூர் போல யானை விரட்டும் குழுவை குடியாத்தம் பகுதியில் அமைக்க வேண்டும், தமிழக அரசு வனத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பின் போது விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பி.குணசேகரன், விவசாயிகள் சங்க தாலுகா நிர்வாகிகள் சி.எம்.நடராஜன், சி.தசரதன் ஆகியோர் உடன் இருந்தனர்.