காஞ்சிபுரம், நவ 1 - காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை பயன்பாட்டில் உள்ள துப்பாக்கி ரகங்கள் மற்றும் வன்முறை தடுப்பு சாதனங்கள் உள்ளிட்டவைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே காட்சிக்கு வைக்கப்பட்டது. ஏராளமானோர் அதனை பார்வையிட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே மாவட்ட காவல்துறை சார்பில் 25 வகையான துப்பாக்கி ரகங்கள் மற்றும் பயன்பாட்டில் உள்ள உபகரணங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டது. இதனை காலையில் நடை பயிற்சி மேற்கொண்ட நபர்கள் மற்றும் விளையாட்டுக்காக மைதானத்திற்கு வந்த இளைஞர்கள் பலர் அதன் பயன்பாட்டினை கேட்டறிந்தனர். இந்த கண்காட்சியில் ஏகே 47 , எஸ்எல்ஆர், பிஸ்டல் , ரிவால்வர் உள்ளிட்ட துப்பாக்கி ரகங்களும், போராட்ட காலங்களில் வன்முறைகளை தவிர்க்க ரியாட் வாகனங்களில் பொருத்தப்படும் நீர் தெளிப்பு உபகரணங்கள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் காட்சிக்கு வைக்கப்பட்ட பின் இந்த ஆயுதங்கள் மீண்டும் காவல்துறை பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.