ராணிப்பேட்டை, நவ. 21 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் மற்றும் முன்னாள் படைவீரர் குடும்பங்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் வியாழனன்று (நவ. 21) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் படை வீரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கனிவுடன் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவித்தார். மனுக்கள் மீது தனித்தனியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும், தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணவும் கேட்டுக் கொண்டார். மேலும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, முன்னாள் படை வீரர் நல வாரியத்தின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.95 ஆயிரம் மதிப்பீட்டிலான கல்வி உதவி தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீராம் குமார், முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் சடையப்பன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.