கடலூர் மாவட்டம், கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கேப்பர் மலை என்ற சரளை கலவை நிறைந்த மலைப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் மணல், சிவப்பு மணல், கூழாங்கற்களின் மற்றும் சரளை கலவை காணப்படுவதால் இயற்கையான நிலத்தடி நீர் நிரப்பு மண்டலமாக திகழ்கிறது. இரு பதுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.
மக்களின் வாழ்வாதாரம்
வெள்ளக்கரை, மதுரா, கொடுக்கன் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மலையடி குப்பம், பெத்தாங்குப்பம், கற்றார் சாவடி, கீரப்பாளையம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வாழ்கின்றனர். சர்வே எண் 207/2-இல் கடந்த நான்கு தலைமுறைகளாக, சுமார் 200 ஆண்டுகளாக 164 ஏக்கர் நிலப்பரப்பில் 155 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
பல்லுயிர் பெருக்கம்
விவசாயிகள் நட்டு வளர்த்த சுமார் 10,000 முந்திரி மரங்கள் பெரும் காடாக மாறியுள்ளது. இக்காடுகள் ஆயி
ரக்கணக்கான மயில்கள், நரிகள், மான்கள் மற்றும் காட்டுப் பன்றிகளுக்கு வாழ்விடமாக திகழ்கின்றன. இப்பகுதி உள்ளூர் பல்லுயிர் பெருக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.
பட்டாவுக்கான போராட்டம்
கிராம வருவாய் பதிவேட்டில் இந்நிலங்கள் “கள்ளங்குத்து” என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 2011ல் தமிழக அரசு அறிவித்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 155 குடும்பங்கள் பட்டாவுக்கு விண்ணப்பித்த னர். அதிகாரிகளும் பட்டா வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் 13 ஆண்டுகளாக பட்டா கிடைக்கவில்லை.
அதிரடி வெளியேற்றம்
2024 டிசம்பர் 19 அன்று வட்டாட்சியர் 1905-ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 7-ன் கீழ் வெளியேற்ற நோட்டீஸ் வழங்கினார். 2025 ஜனவரி மாதம் அதிகாரிகள் மக்களை மிரட்டியதோடு, வட்டாட்சியர் “புறம்போக்கில் குடியிருப்பதற்கு பதிலாக மருந்து குடித்து இறந்து போங்கள்” என கூறி மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார்.
ஜனவரி 29 அன்று விடியற்காலை 5 மணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள், கனரக இயந்திரங்கள், ஆம்பு லன்ஸ், தீயணைப்பு வாகனங்களுடன் கிராமங்களில் நுழைந்து நூற்றாண்டுகள் பழமையான முந்திரி, மா, பலா மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தனர். எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் கைது செய்தனர்.
சட்ட முரண்பாடுகள்
அரசாணை எண் 366 (8.10.2009) படி, அரசு நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பவர்களுக்கும், சாகுபடி செய்பவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். ஆனால் கடலூர் மாவட்ட நிர்வாகம் இச்சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளது.
பண்ருட்டி வட்டத்தில் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோருக்கு அரசு தரிசு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. தஞ்சை சாஸ்திரா கல்லூரி, சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு விவசாயிகள்
சங்கத்தின் கோரிக்கைகள்
1. வேளாண் கல்லூரியை ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்டு கைவிடப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கான இடத்தில் அமைக்க வேண்டும்
2. 200 ஆண்டுகளாக வசித்து வரும் 155 குடும்பங்களுக்கு வீடுகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும்
3. அழிக்கப்பட்ட முந்திரி மரங்கள், மா, பலா, பூஞ்செடிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
4. சட்ட விரோதமாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சி யர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜே.ராஜேஷ்கண்ணன்
கடலூர் மாவட்ட செயற்குழு
உறுப்பினர் சிபிஎம்