புதுச்சேரி, நவ.20- பென்சனர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும் என புதுச்சேரி இபிஎப் பென்சனர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி இபிஎப் பென்சனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கிற்கு சங்கத் தலைவர் ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மக்களவை உறுப்பினர் வெ.வைத்தியலிங்கம் பங்கேற்று பேசி னார். சென்னை இபிஎப் பென்சனர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பென்சனர் சங்கத்தின் ஆலோசகர் நடராஜன், புதுச்சேரி பென்சனர்கள் சங்க செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், குணசேகரன், நிர்வாகிகள் நிலவின், ராமலிங்கம் உள்ளிட்ட திரளான பென்சனர்கள் பங்கேற்றனர். தீர்மானங்கள் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், மூத்த குடி மக்களுக்கு வழங்கி வந்த ரயில்வே சலுகைகள் மீண்டும் வழங்க வேண்டும், 2022 ஆம் ஆண்டு பென்சனர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பல்வேறு குழுக்களின் பரிந்துரையின்படி இடைக்காலமாக பென்சன் ரூ. 3ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.