புதுச்சேரி,ஏப்.2- புதுச்சேரி எல்லைகளில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும் படை மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கணபதி செட்டிக்குளம், சிவாஜி சிலை, ஐய்யங்குட்டிப்பாளையம், கோரிமேடு, பத்துக்கண்ணு மற்றும் திருக்கானூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அ. குலோத்துங்கன் திங்களன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் சோதனைச் சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உரிய அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.