districts

img

எழும்பூர் ரயில் நிலையத்தில் நகராமல் நிற்கும் நகரும் படிக்கட்டுகள்

சென்னை,நவ.4- சென்னை எழும்பூர் ரயில் முனையத்தில் 11 நடைமேடைகள் உள்ளன. இதில் 1 முதல் 3 நடைமேடைகள் எழும்பூர் ரயில் நிலையத்தின் தெற்கு ஓரத்தில் அமைந்துள்ளன. 4-வது நடைமேடையே எழும்பூர் ரயில் நிலையத்தின் பிரதான நடைமேடையாக உள்ளது. இந்த நிலையில், பெரும்பாலான பயணிகள் நடைமேடை 4-ல் உள்ள நகரும் படிக்கட்டின் வழியாக நடைமேம்பாலத்தில் ஏறியே 5 முதல் 11 வரையிலான நடைமேடைகளுக்கு செல்வது வழக்கம். நடைமேடை 4-ன் அருகில் லிப்ட் வசதி இருந்தாலும் அதில் குறைந்த அளவிலான பயணிகளே ஏறிச் செல்லமுடியும். நகரும் படிக்கட்டு அளவிற்கு லிப்ட்டில் பயணிகள் ஏறி செல்ல முடியாது. அதே நேரத்தில் ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில், வெளியில் இருந்து நேரடியாக பயணிகள் நடைமேம்பாலத்தில் ஏறும் வகையிலும், இறங்கும் வகையிலும் 2 நகரும் படிக்கட்டுகள் உள்ளன. இந்த நகரும் படிக்கட்டுகளை பயணிகள் நேரடியாக பயன்படுத்த முடியாத வகையில் இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சற்று சுற்றி வந்தே அதனை பயன்படுத்தும் நிலை உள்ளது. இருப்பினும் அதிக அளவிலான மக்கள் இந்த நகரும் படிக்கட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த பிரதான நகரும் படிக்கட்டுகள் பெரும்பாலான நேரங்களில் நகராமல் நிற்கும் நிலையே காணப்படுகிறது.இதனால், பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதே போன்று, 5 முதல் 9-வது வரையிலான நடைமேடைகளில் உள்ள நகரும் படிக்கட்டுகளும் பல நேரங்களில் நகராமல்தான் நிற்கின்றன. இது சில சமயங்களில், பயணிகள் தங்கள் ரயில்கள் வழக்கமாக நிற்கும் நடைமேடையில் வந்து ரயில்களுக்காக காத்து இருப்பார்கள். ஆனால், அன்று பார்த்து ஏதோ தொழில்நுட்ப காரணங்களால் அந்த ரயிலானது புறப்பாடு நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் ரயில் நிலையத்திற்குள் கொண்டு வரப்பட்டு வழக்கமான நடைமேடையில் இல்லாமல் 2, 3, நடைமேடைகள் தாண்டி நிறுத்தப்படும். அதுபோன்ற சமயங்களில் வழக்கமான நடைமேடையில் காத்திருக்கும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நகரும் படிக்கட்டுகளானது நகராமல் இருப்பது கடும் சிரமத்தை அளிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. இது ஒருபுறம் இருக்க 10-வது நடைமேடையில் உள்ள நகரும் படிக்கட்டும், ரயில் நிலையத்தின் பின்பகுதியில் கிழக்குப்பகுதி நடைமேம்பாலத்திற்கு செல்வதற்கான நகரும் படிக்கெட்டும் நீண்ட நாட்களாக இயங்காமல் பராமரிப்பு இன்றி கிடப்பதாலும் பயணிகள் கடும் அவதியை அடைகின்றனர். ஆகவே உடனே தெற்கு ரயில்வே நிர்வாகம் இதில் தனிக்கவனம் செலுத்தி நகரும் படிக்கட்டுகளை முழுமையாக இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.