சென்னை, ஜன.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தை, டி.யூ.ஜெ. மாநிலத்தலைவர்கள், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, தீர்வு காணவேண்டிய பத்திரிகையாளர்கள் பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்த விபரம் வருமாறு, விழுப்புரம் சிபிஐஎம் மாநில மாநாட்டில் மாநில செய லாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெ. சண்முகம் அவர்களை, தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் சங்க நிர்வாகிகள் சங்கத்தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் தலைமையில் பொதுச்செயலாளர் கோ.முத்து, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் “கார்ட்டூனிஸ்ட்” டி.ராஜேந்திர குமார், சென்னை மாவட்ட துணைத்தலைவர் சி.ஜெயராஜ் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பத்திரிகையாளர்களின் கோரிக்கைகள் குறித்து, மனுவையும் அளித்தனர். ஊரக பத்திரிகையாளர்கள் அனைவரையும் உடனடியாக நலவாரியத்தில் இணைத்து, பென்சன் உள்ளிட்ட அனைத்து அரசு சலுகைகள் பெற வழிவகை செய்யவேண்டும், பணிமூப்பு பெற்ற பத்திரிகை - ஊடகவியலாளர்கள் அனைவரும் பயன் அடையும் விதமாக, ஓய்வூதிய நிபந்தனைகளை தளர்த்த வேண்டும், சிறு பத்திரிகைகள் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பிரதி அச்சடிக்க வேண்டும் என கடும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பெ. சண்முகத்திடம் சங்கத்தலைவர்கள் அளித்தனர். விவரங்களை, சங்கத்தலைவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட அவர் இது குறித்து முதல்வரை சந்திக்கும்போது, வலியுறுத்துவதாக உறுதி அளித்தார்.