விழுப்புரம், மே 30- விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் ராஜா. போலீசாரால் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் இறந்துவிட்டதாகவும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் ராஜாவின் மனைவி அஞ்சு கூறினார். மேலும், உடலை மறு கூராய்வு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் மே 30 அன்று மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில் சென்னை, திருநெல்வேலி மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தலைமையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மறு உடற்கூறு ஆய்வு நடைபெற்றது. மேலும், ராஜாவின் பிரேதத்தை அவரது மனைவி அஞ்சுவிடம் மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்தார். அதன்பிறகு, விழுப்புரம் கே.கே. சாலையில் உள்ள இடுகாட்டில் ஆட்சியர் முன்னிலையில் ராஜாவின் உடலை அடக்கம் செய்தனர். விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜா சாகுல் அமீது, விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ், விழுப்புரம் நகராட்சி ஆணையர் ரமேஷ், விழுப்புரம் தாசில்தார் வசந்தம் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.