சென்னை, பிப்.11- திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புற்றுநோய் நோயாளிகளின் புத்துணர்வு மையம் கட்டிடத்திற்கு செவ்வாய்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. திருப்பூர் ரோட்டரி மற்றும் பப்ளிக் வெல்ஃபேர் டிரஸ்ட் மூலமாக கட்டித்தரப்படவுள்ள இந்த மையத்தின் கட்டிட பணிக்கு நன்கொடையாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை ராம்ராஜ் காட்டன் நிறுவனர்-தலைவர் கே.ஆர். நாகராஜன் வழங்கினார். இந்த நன்கொடையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஏ. முருகநாதன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் வழங்கிய இந்த பெரும் நன்கொடை தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் மற்றும் பலருக்கும் நன்கொடை வழங்குவதற்கான தூண்டுதலை அளிப்பதாகவும் அமைகிறது என டாக்டர் ஏ. முருகநாதன் குறிப்பிட்டார்.