காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை, ஜூலை 18 – ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சியில் உள்ள 15 வது வார்டு நரசிங்கபுரம் பகுதியில் மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து சிறப்பு கண்காணிப்பு முகாமை நடத்தின.
இந்த நிலையில், மஞ்சள் காமாலை காய்ச்சல் பாதிப்பு இன்னும் உள்ளதா? என்பதை கண்டறிந்து தொடர்ந்து இப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில், சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் காய்ச்சல் தடுப்பு மருத்துவ பரிசோதனைகள் நரசிங்கபுரம் பகுதிகள் முழுவதும் மூன்றாவது நாளாக நடைபெற்றது.
குடிநீர் தொட்டிகள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டு டிராக்டர் மூலம் அனைத்து குடியிருப்புகளுக்கும் வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து வீடுகளிலும் தண்ணீர் தொட்டிகள் ஆய்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் குளோரின் கலந்த குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
கடலூர், ஜூலை 18- கடலூர் மாவட்ட செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அகாடமியின் தலைவர் கலைச்செல்வன், கவுரவ தலைவர் முரசொலி ராஜா மற்றும் கடலூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் இணை பொருளாளர் சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்ற 100 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, 570 சான்றுகளும் வழங்கப்பட்டது. வெள்ளி விழாவை முன்னிட்டு முதல் முறையாக போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் புள்ளிகள் அடிப்படையில் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
ஆர்.கே.நகரில் ரத்ததான முகாம்
கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த கடலூர் குமார், ஆனந்தன் 25ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஆர்.கே.நகர் பகுதி 38ஆவது வட்டம் கருணாநிதி நகர் கிளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.. இதில் 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா, மாவட்டத் தலைவர் ஜி.நித்தியராஜ், செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், பொருளாளர் அ.விஜய், மருத்துவர் சித்ரா, பகுதி துணைச் செயலாளர் எம்.எஸ்.ஷாஜகான், பகுதிக்குழு உறுப்பினர் தி.ஐஸ்வர்யா, நிர்வாகிகள் ரிஸ்வானா, கோகுல், பிரியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தகவல் ஆணையர் விசாரணை
திருவண்ணாமலை,ஜூலை 18-
திருவண்ணாமலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பில் மாநில தகவல் ஆணையர் முனைவர் மா.செல்வராஜ் தலைமையில் விசாரணை முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
முகாமில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் தகவல் கோரிய மனுதாரர்கள் அளித்த புகார்கள் மீது இரண்டாம் கட்ட மேல்முறையீட்டு விசாரணை நடைபெற்றது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கிடைக்க பெறாத மனுதாரர்கள் மேல்முறையீட்டுக்காக நேரடியாக சென்னைக்கு வர சிரமமாக இருக்கும் என்பதை கருதி, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பில் தலைமை ஆணையர் மற்றும் ஆணையர்கள் நேரடியாக மாவட்டங்களுக்கு சென்று, புகார் தெரிவித்த மனுதாரர்கள் மற்றும் பொது தகவல் அலுவலர்களை சந்தித்து விசாரணை நடத்துகிறார்கள்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட மேல்முறையீடு செய்த மனுதாரர்களிடம் இருந்து வருவாய்த்துறை தொடர்புடைய 1 வழக்கு மற்றும் ஊரக வளர்ச்சி துறை தொடர்புடைய 36 வழக்குகளுக்கு மாநில தகவல் ஆணையர் விசாரணை நடத்தினார்.
காசிமேட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
சென்னை, ஜூலை 18- சென்னை காசிமேட்டில் இளைஞரை தாக்கி வழிப்பறி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். காசிமேடு ஜீவரத்தினம் நகர் அருகே உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ம.ஜான் பாட்ஷா (35). இவர், கடந்த 16ஆம் தேதி காசிமேடு எஸ்.என். செட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது 2 பேர் அவரை தாக்கி பணத்தை பறித்துச் சென்றனர். இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், புது வண்ணாரப்பேட்டை அண்ணாநகரைச் சேர்ந்த சு.ஜீவா (26),அதே பகுதியைச் சேர்ந்த தா.சூசைராஜ் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர்.