கடலூர், செப். 21- கடலூர் மத்திய சிறைசாலையில் மனித உரிமை மீறல்கள் உள்ளதா? என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 900-க்கு அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள னர். இந்நிலையில் வியாழக்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் திடீரென கடலூர் மத்திய சிறைச்சாலைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். கடலூர் மத்திய சிறை சாலைக்குள் இருக்கும் கைதிகளுக்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றதா, சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப் படுகின்றதா, நீதிமன்ற உத்தரவுகள் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா?, என ஆய்வு செய்தார். இதற்கிடையே அங்கு சிறை வாசிகளின் இன்னிசையும், பாடல்களையும், அவர் கேட்டு ரசித்தார். ஆட்சியர் சிறை சாலைக்குள் சென்று ஆய்வு மேற்கொள்வது இதுவே முதன்முறை என தெரிகிறது. பல்வேறு விதமான மனித உரிமை மீறல் புகார்களின் அடிப்படையில், இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.