திருவள்ளூர், நவ 12- திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகில் உள்ள நல்லூர், அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாகும். இந்த பகுதியில் அரிசி ஆலை, சிறு வர்த்தக நிறுவனங்கள் கலைஞர் கருணாநிதி சாலையையொட்டி அமைந்துள்ளது. இந்த ஒன்றிய சாலை சுமார் ஒரு கி.மீ தூரம் உள்ளது. இந்த சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பாதசாரிகள் சேற்றில் நடந்து செல்கின்றனர். வாகனங்களும் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலை என்பதால், இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லூர் கிளை செயலாளர் எஸ்.மகாலிங்கம் தலைமையில் பொது மக்களிடம் கையெழுத்து பெற்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இரண்டு முறை மனு அளித்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் ஒன்றிய சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பி.நடேசன் வியாழனன்று (நவ 10) மனு அளித்துள்ளார். 15 ஆண்டுகளாக இந்த சாலையை சீரமைக்கப்படவில்லை என்றும் மேலும் காலதாமதம் செய்தால், அடுத்து வலுவான போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.