திருவண்ணாமலை, டிச.18- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாலாம்பாக்கம் கிராமத்தில் வேட்டைக்காரன் இன மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக இடிக்கப்பட்ட பள்ளிக்கூடத்தை மீண்டும் கட்டித்தர வேண்டும்,150 குடும்பங்களுக்கு மேல் இங்கு மக்கள் வசிப்பதால் அவர்களுக்கு பகுதி நேர ரேசன் கடை அமைக்க வேண்டும், நெல் உலர்ந்த களம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வின்போது, இரும்புலியூர் கிராமத்தில் வேட்டைக்காரன் இனத்தைச் சேர்ந்த சௌபாக்கியம் சேட்டு என்பவருக்கு அரசு கொடுத்த விவசாய நிலத்தை மாற்று சமுதாயத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டுத் தரக்கோரி ஆரணி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வேட்டைக்காரன் மாநிலச் செயலாளர் கங்காதுரை, திருவள்ளூர் மாவட்ட தலைவர் டில்லி, மாநில குழு உறுப்பினர்கள் பாலு, மணி, முருகன், வெங்கடேசன், முனுசாமி, சிபிஎம் ஆரணி வட்டச் செயலாளர் ரமேஷ் பாபு, போளூர் வட்ட செயலாளர் சிவாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.